பிணத்தை அடக்கம் செய்வதில் மோதல்- அரிவாள்களுடன் சண்டை- போலீஸ் கண்ணீர் புகைகுண்டு வீச்சு
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, பிணத்தை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட பெரும் மோதல் வெடித்தது. இதையடுத்து போலீஸார்கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் இறந்தவரின் உடலைப் போட்டுவிட்டு கூட்டம்சிதறியோடியது.
ஓமலூர் அருகே உள்ளது காசிநாயக்கன்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தை அடுத்துதான் சுடுகாடு உள்ளது. உடல்களை அடக்கம் செய்யச் செல்வோர் இவரது கரும்புத் தோட்டத்தைக் கடந்து தான் செல்ல வேண்டும்.
நேற்று முத்தம்மாள் என்பவரின் உடலை அடக்கம் செய்வதற்காக அவரது உறவினர்கள் சடலத்தை எடுத்து வந்தனர். ஆனால், சடலத்தைதனது நிலத்தின் வழியே கொண்டு செல்வதற்கு கருப்பண்ணனும், அவரது குடும்பத்தினரும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து முத்தம்மாளின் உறவினர்களுக்கும், கருப்பண்ணனின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபெரும் மோதலாக வெடித்தது. கத்தி, அரிவாள், கம்புகளுடன் இருதரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர்.
பலருக்கும் வெட்டு விழுந்தது. பலரின் மண்டை உடைந்தது. அருகில் இருந்த வீடுகள், கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன.
சம்பவம குறித்து அறிந்தவுடன் போலீஸார் விரைந்து வந்தனர். கூட்டத்தைக் கலைந்து செல்லுமாறு அவர்கள் எச்சரித்தனர். ஆனாலும் இருதரப்பினரும் தொடர்ந்து அடிதடியில் ஈடுபடவே போலீசார் தடியடி நடத்தினர். இதற்கும் கூட்டம் கட்டுப்படவில்லை. அவர்கள் போலீசார்மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினர்.
பெண்கள் கரும்புத் தோட்டத்தில் மறைந்து கொண்டு போலீசார் மீது கற்களை வீசினர். இதையடுத்து போலீசார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர். இதில் 6 பெண்கள் காயமடைந்தனர். மேலும் கரும்புத் தோட்டத்துக்குள் புகுந்து பெண்களை ஓட ஓட விரட்டிபோலீசார் தடியடி நடத்தினர்.
இதையடுத்து பிணத்தை சுடுகாட்டிலேயே போட்டுவிட்டு கூட்டம் கலைந்து ஓடியது. தகராறில் மொத்தம் 19 பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் குறித்து அறிந்ததும், மாவட்ட ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன், காவல்துறைக் கண்காணிப்பாளர் பொன்.மாணிக்கவேல்ஆகியோர் விரைந்து வந்து கிராமத்தினருடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் முத்தம்மாளின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.
எஸ்.பி. மாணிக்கவேல் தலைமையிலான படை அந்த ஊரிலேயே முற்றுகையிட்டுள்ளது.