பெற்றோரை நாயை விட்டு துரத்திய மகன்-மருமகள்
சென்னை:
பெற்றெடுத்து, வளர்த்து, படிக்க வைத்து, ஆளாக்கிய தாய், தந்தையரை நாயை ஏவி விட்டு வீட்டை விட்டுத் துரத்திய மகனையும்,அவருக்குத் துணையாக இருந்த மருமகளையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் வேதபுரி. 76 வயதாகும் இவர் தனது சொந்த வீட்டில் மனைவி ராஜேஸ்வரியம்மாள், மகன் முரளி,மருமகள் உமா ஆகியோருடன் வசித்து வந்தார்.
தந்தை பெயரில் இருந்த வீட்டை தனது பெயருக்கு மாற்றித் தருமாறு வேதபுரியை அடிக்கடி வலியுறுத்தி வந்தார் முரளி. வீட்டின் மீது முரளிலட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, கடனை முதலில் அடைக்கும் வழியைப் பார். அதற்குப் பிறகு வீட்டைத்தருகிறேன் என்று கூறி விட்டார் வேதபுரி.
இதனால் ஆத்திரமடைந்தார் முரளி. அவருக்குத் தூபம் போட்டுத் தூண்டி விட்டார் உமா. இருவரும் சேர்ந்து, அந்த வயோதிக தாய்,தந்தையரை வீட்டை விட்டு வெளியே துரத்தினர்.
இதைப் பார்த்து அதிர்ந்த அக்கம் பக்கத்தினர் முரளியையும், உமாவையும் கண்டித்து பெரியவர்களை வீட்டுக்குள் போகுமாறுகூறியுள்ளனர்.
அப்போது, வீட்டில் இருந்த நாய்களை பெற்றோர் மீது ஏவி விட்டுள்ளார் முரளி. இதனால் அதிர்ந்து போன அந்த முதிய தம்பதியினர்,கண்ணீருடன் அரும்பாக்கம் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தனர்.
புகாரைக் கேட்டு டென்சனான துணை கமிஷனர் சேஷசாயி, போலீசாருடன் விரைந்து சென்றார் முரளியை ரோட்டில் வைத்து அறைவிட்டகமிஷ்னர் அவரையும் உமாவையும் கைது செய்து ஜீப்பில் ஏற்றி காவல் நிலையம் கொண்டு வந்தார்.
இப்போது இருவரும் லாக்-அப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கடுமையான விதிகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யபட உள்ளது.
எங்கே போய்க் கொண்டிருக்கிறது நம் சமூகம்?