பேரூராட்சி அலுவலகத்தை சூறையாடிய காங். பிரமுகர்
மதுரை:
மதுரை அருகே வாடிப்பட்டி, ஆனையூர் பேரூராட்சி அலுவலகத்திற்குள் புகுந்து அலுவலகத்தை சூறையாடியகாங்கிரஸ் பிரமுகரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
வாடிப்பட்டி அருகே உள்ளது ஆனையர் பேரூராட்சி. இங்கு கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத்தோற்றவர் செல்லத்துரை. இவர் பேக்கரி ஆரம்பிப்பதற்கு உரிமம் கேட்டு பேரூராட்சியில் விண்ணப்பத்திருந்தார்.ஆனால் அது தாமதமாகி வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த அவர் நேற்று பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தார். அங்கிருந்த பேரூராட்சித் தலைவர்,உறுப்பினர்கள், ஊழியர்களைப் பார்த்து சரமாயாக திட்டிய அவர், அலுவலகத்தில் இருந்த பைல்கள்,டேபிள்களை சூறையாடினார்.
எல்லாவற்றையும் தூக்கி ரோட்டில் எறிந்த அவரை அடக்க முடியவில்லை. இதையடுத்து சாலையில் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் உள்ளே ஓடிவந்து செல்லத்துரையைத் தாக்கினர்.
பின்னர் அவரை கட்டி வைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.