கோஷ்டிகளை ஒடுக்க ஒட்டுமொத்த கோஷ்டி
சென்னை:
காங்கிரசில் தலைவர்களுக்கு பஞ்சமே இருந்ததில்லை. தொண்டர்கள் தான் இருக்க மாட்டார்கள். காங்கிரசைப்பொறுத்தவரை தலை இருந்தால் போதும், அவர் தலைவர் தான்.
இப்போது தமிழக காங்கிரஸ் கட்சியில் நடந்து வரும் கோஷ்டிப் பூசலுக்கு முடிவு கட்ட அனைத்து கோஷ்டித்தலைவர்களையும் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளார் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரான கமல்நாத். இந்தக்குழுவில் சோ. பாலகிருஷ்ணன் தவிர 10 கோஷ்டித் தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
காங்கிரசில் பல கோஷ்டிகள் உண்டு. இதில் முக்கியமானவை த.மா.கா. கோஷ்டி- காங்கிரஸ் கோஷ்டி ஆகியவை.இதையடுத்து ஜி.கே. வாசனின் த.மா.கா. கோஷ்டியைச் சேர்ந்த சோ.பாலகிருஷ்ணன் தலைவராகவும் காங்கிரஸ்கோஷ்டியைச் சேர்ந்த இளங்கோவன் செயல் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர்.
ஆனால், காங்கிரஸ் கோஷ்டிக்குள்ளேயே பல கோஷ்டிகள் உண்டு. அதில் முக்கியமானவை ஜி.கே.வாசன்,எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், குமரி அனந்தன், திண்டிவனம் ராமமூர்த்தி, இளங்கோவன், ஜெயந்தி நடராஜன்,தங்கபாலு, அருணாச்சலம், பிரபு, அன்பரசு கோஷ்டி ஆகியவை.
இதில் தங்கபாலு, பிரபு கோஷ்டி அதிமுகவுக்கு ஆதரவானது. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், இளங்கோவன்கோஷ்டி திமுகவுக்கு ஆதரவானது. அதே நேரம் இளங்கோவனுக்கும் எஸ்.ஆர்.பிக்கும் ஒத்து வராது.அன்பரசுவுக்கும் யாருக்கும் ஒத்து வராது.
தங்கபாலுவைச் சுற்றி எப்போதும் ஒரு பெரும் கூட்டம் இருக்கும். அடுத்த கோஷ்டி குறித்து மொட்டே பெடிசன்போடுவதில் கைதேர்ந்தது இவரது கோஷ்டி. காங்கிரஸ் அலுவலகத்தில் நடக்கும் ரகசிய ஆலோசனைகள் கூடஅதிமுக தலைமைக்கு இவர் கோஷ்டி மூலம் லீக் செய்யப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. இதனால்தங்கபாலுவின் ஆட்கள் யாராவது வந்தால் பிற கோஷ்டியினர் மெளனத்தில் ஆழ்ந்துவிடுவர்.
ஜி.கே. வாசன் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் பக்கம் வருவதே இல்லை. எஸ்.ஆர்.பி. சட்டமன்றத்தில்அதிமுகவுடன் மோதுவார், கட்சி அலுவலதத்தில் வாயே திறக்க மாட்டார். பிரபு தனது பிசினசோடு சேர்த்து சைடில்கட்சியையும் பார்த்துக் கொள்வார்.
ஜெயந்தி நடராஜன் எல்லா பிரச்சனைகளுக்கு டெல்லிக்கு காவடி தூக்குவார். குமரி அனந்தன் வசனம் பேசுவார்,தொண்டர்களின் ஆதரவு கொஞ்சமும் கிடையாது. திண்டிவனம் ராமமூர்த்தி சொந்த ஊரிலேயே தான் இருப்பார்.தேர்தல் வந்தால் கட்சி அலுவலகத்துக்கு வருவார்.
மணிசங்கர் ஐய்யர் டெல்லியில் உட்கார்ந்தே தமிழக அரசியலை நடத்துவார்.
இளங்கோவன் எல்லோரையும் வாருவார். அவரை சோ.பா. வாருவார். சோ.பாவுக்கு எஸ்.ஆர்.பி- ஜி.கே. வாசன்கோஷ்டி பின் பலம் உண்டு. இவர்கள் மூலம் இளங்கோவனை வாசன் தாக்குவார். இளைஞர் காங்கிரசை தன் பக்கம்வைத்துள்ளார் இளங்கோவன். அவர்கள் மூலம் வாசன் கோஷ்டியை மட்டம் தட்டுவார் இளங்கோவன்.
இப்படி பல்வேறு குழப்பம், குழப்பத்துக்குள் குழப்பம், அதுக்குள்ளேயும் குழப்பம் கொண்டது தமிழக காங்கிரஸ்.சத்தியமூர்த்தி பவனுக்குள் போய் வரும் நிருபர்களுக்கே சில நேரம் தலை சுற்றுவது உண்டு. அடச்சே என்றுநொந்தபடி எதிரில் உள்ள ஷர்மானி ஹோட்டலில் போய் தம் டீ அடித்தால் தான் தலைவலியே போகும்.
இப்படி நிருபர்களுக்கே சிம்ம சொப்பனமாய் விளங்கும் காங்கிரஸ் கட்சியை கவனிக்கும் பொறுப்பில் உள்ள கமல்நாத்துக்கு எப்படி இருக்கும் என்று நாம் விளக்க வேண்டியதே இல்லை.
சமீபத்தில் அவர் சென்னை வந்தபோது அனைத்து கோஷ்டிகளையும் சந்தித்தார். அனைவரும் அடுத்தவர் மீதுபுகார் வாசிக்க, அட நிறுத்துங்கப்பா என்று கூறிவிட்டு டெல்லிக்கு பிளைட் ஏறிவிட்டார்.
ப.சிதம்பரத்தை தலைவராக்கிவிடுமாறு சோனியாவிடம் சொன்னார். ஆனால், ப.சி. லாவகமாகத் தப்பிவிட்டார்.அடுத்து ஜெயந்தி நடராஜனைத் தலைவராக்கச் சொன்னார். ஆனால், இதற்கு அனைத்து கோஷ்டிகளிடம் இருந்தும்எதிர்ப்பு வர சோனியா அந்த யோசனையை நிராகரித்துவிட்டார்.
பார்த்தார் கமல் நாத். தனது அடுத்த ஆயுதமாக அனைத்து கோஷ்டித் தலைவர்களையும் கொண்ட ஒரு புதியகோஷ்டியை.. சாரி குழுவை ஏற்படுத்தியுள்ளார். அதற்கு வழிகாட்டுக் குழு என்று நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது.
இதில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கோஷ்டிகளின் தலைவர்களான சோ.பா, இளங்கோவன், மணிசங்கர் ஐய்யர்,வாசன், எஸ்.ஆர்.பி, திண்டிவனம் ராமமூர்த்தி, தங்கபாலு, குமரி அனந்தன், பிரபு, ஜெயந்தி நடராஜன்,அருணாச்சலம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அன்பரசு உள்பட மற்ற கோஷ்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications