பாக். உடனான பேச்சு தோற்றால் ராஜினாமா: வாஜ்பாய்
பெர்லின்:
இந்த முறை பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் பதவி விலகிவிடப் போவதாக பிரதமர்வாஜ்பாய் அறிவித்துள்ளார்.
ஜெர்மனி, ரஷ்யா, பிரான்ஸ் நாடுகளில் 8 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்வாஜ்பாய். பயணத்தின் முதல் கட்டமாக அவர் பெர்லின் வந்து சேர்ந்தார்.
ஜெர்மனியின் டெர் ஸ்பீய்ஜெல் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் இதனைத்தெரிவித்தார்.
அந்த பேட்டியில், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரபுடன்பேச்சு நடத்த நான் தயார் தான்.
இதுவரை இரண்டு முறை பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தியாகிவிட்டது. இரண்டு முறையும் தோல்விதான் கிடைத்தது. இப்போது மூன்றாவது முறையாக பேச்சுவார்த்தைகளுக்கு முயற்சி எடுத்துள்ளேன்.இது தான் எனது கடைசி முயற்சியாக இருக்கும். இதிலும் தோல்வியே கிடைத்தால் நானேதோற்றவனாவேன்.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பதவி விலகிவிடுவேன் என்று வாஜ்பாய் கூறியுள்ளார்.
தற்கொலைப் படைகள் தயார்:
இந்தியாவுடனான பேச்சு தோல்வியடைந்தால் உடனே ஆயிரக்கணக்கான தற்கொலைப்படைத் தீவிரவாதிகளைகாஷ்மீருக்குள் ஊடுருவச் செய்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதற்காக லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.பாகிஸ்தானைச் சேர்ந்த அமெரிக்க வார இதழான சவுத் ஏசியா டிரிபியூன் இதனை வெளியிட்டுள்ளது.
ஜெய்ஷ்-ஏ-முகம்மத் தீவிரவாத அமைப்புக்கு அல்-கொய்தாவுடன் தொடர்பு இருப்பதால் அந்த அமைப்பைஇந்தியாவுக்கு எதிரான தாக்குதலில் அதிகம் ஈடுபடுத்தினால் அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாக வேண்டிவரும் என்பதால் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பையே தாக்குதலில் ஈடுபடுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
ஊடுருவல் குறையவில்லை:
பேச்சுவார்த்தைகளுக்கு இரு நாடுகளும் தயாராகி வந்தாலும் கூட எல்லை தாண்டி வரும் தீவிரவாதிகளின்எண்ணிக்கை இதுவரை குறையவில்லை என இந்திய ராணுவத் துணைத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சாந்தனுசெளத்ரி கூறியுள்ளார்.
ஆச்சரியம் தந்த ஜெர்மன் குழந்தைகள்:
முன்னதாக ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள மகாத்மா காந்தி சர்வதேசப் பள்ளியில் ஜெர்மன் இந்தியர்கள் சார்பில் பிரதமர்வாஜ்பாய்க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஜெர்மன் குழந்தைகள் மகாத்மாவின் ரகுபதி ராகவ ராஜாராம் பாடலைப் பாடி பிரதமரை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தினர்.
ஜெர்மன் குழந்தைகளின் இந்த வித்தியாசமான வரவேற்பில் பெரும் மகிழ்ச்சியடைந்த பிரதமர்உடனே அவர்களுக்கு தனது அரசின் சார்பில் பெரிய பரிசையும் அறிவித்தார்.
இனி ஆண்டுதோறும் இந்தப் பள்ளியில் முதலிடம் பெற்றுத் தேறும் மாணவர் இந்தியாவில் 2 வாரகாலம் அரசு விருந்தினராக பயணம் செய்யலாம் என வாஜ்பாய் அறிவித்தார். அவ்வாறு இந்தியாவரும் மாணவரின் அனைத்துச் செலவுகளையும் இந்திய அரசே ஏற்கும் எனவும் மாணவருக்குத்துணையாக மேலும்ஒருவரும் உடன் வரலாம் என்றும் அறிவித்தார் வாஜ்பாய்.
இந்திய கலாச்சார உறவுக் கவுன்சில் இந்த மாணவருக்கான பயணச் செலவுகளை ஏற்கும் எனஜெர்மனிக்கான இந்தியத் தூதர் ரங்காச்சாரி தெரிவித்தார்.
பள்ளி நிகழ்ச்சியில் பேசிய வாஜ்பாய், பெர்லினின் இந்த இனிமையான மாலை பொழுதையும்ஜெர்மன் குழந்தைகளின் பாட்டையும் என்னால் மறக்க முடியாது என்றார்.