தமிழகத்தில் இளைஞர்களின் ஆட்சி: ப.சிதம்பரம் சபதம்
மதுரை:
தமிழகத்தில் 2006ல் இளைஞர்களின் ஆட்சியை அமைப்போம் என்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை பொதுச்செயலர் ப.சிதம்பரம் கூறினார்.
காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை சார்பில் மதுரையில் நநடந்த காமராஜர் நூற்றாண்டு விழா நிறைவுப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:
தமிழகத்தில் திராவிடக் கட்சியின் ஆட்சி என்பது இதுவே கடைசியாக இருக்க வேண்டும். திமுகவுக்கு மாற்றுஅதிமுக என்றும், அதிமுகவுக்கு மாற்று திமுக என்றும் கருதுவதுதான் தமிழகத்தின் மிக மோசமான மூடநம்பிக்கை.
மத்தியில் வாஜ்பாய் அரசை ஆதரிப்பதில் இரு கட்சிகளும் போட்டி போடுகின்றன. காமராஜரின் வரலாற்றைஇன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
தமிழை ஆட்சி மொழியாக்கியது முதல் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்ததுவரை பல நலத் திட்டங்களை நிறைவேற்றியது காமராஜர்தான். காமராஜர் ஆட்சி என்பது ஒரு குறியீடு. நல்லஆட்சிக்கு இன்றும் தேசிய அளவில் ஒரு உதாரணம் சொல்ல முடியுமென்றால் அது அவரது ஆட்சி தான்..
அந்த எளிமை, நேர்மை, திறமை, புதுமை, மனிதநேயம் உள்ள ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும்.
1967ம் ஆண்டு திசை திரும்பிய தமிழகத்தை மீண்டும் சரியான பாதைக்குத் திருப்ப வேண்டும். அப்போது ஒருதலைமுறை இளைஞர்கள் காங்கிரஸை விட்டு விலகினர். அவர்களை மீண்டும் காமராஜர் வழிக்குத் திருப்பவேண்டும். அதைத் தான் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை செய்து கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியில் எங்களுக்கு இடம் உண்டு என்றாலும் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை தொடர்ந்து தனியேசெயல்படும். காங்கிரஸில் முதிர்ச்சியும், அனுபவமும், கதரும் உள்ளன என்றால், ஜனநாயகப் பேரவையில்இளமையும், துணிச்சலும், கலரும் உள்ளன.
இந்த இரண்டு கட்சிகளும் இணையும்போது நிச்சயம் காமராஜர் ஆட்சியை ஏற்படுத்த முடியும். தம்பி உடையான்படைக்கு அஞ்சான் என்று கூறுவார்கள். நமக்கு அண்ணனாக சோ.பாலகிருஷ்ணனும், தம்பியாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் உள்ளனர்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை அமைக்கும் உங்கள் லட்சியத்துக்கு நாங்கள் ஒத்துழைப்பு அளிக்கிறோம்.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைப்பதற்கு நீங்கள் (காங்கிரஸ்) துணையாக இருங்கள்.
தமிழகத்தில் 2006ல் காங்கிரஸ் ஜீன்கள் உள்ளவர்களின் ஆட்சியை ஏற்படுத்த மக்கள் உதவினால் தமிழகஇளைஞர்கள் அனைவருக்கும் தமிழகத்திலேயே வேலைவாய்ப்பை உருவாக்கவோம். ஜெயலலிதா தனது 2ஆண்டு கால ஆட்சிச் சாதனையாக எதைக் கூற முடியும்? எந்தப் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?
எதற்கெடுத்தாலும் நிதி இல்லை என்றுதான் கூறுகிறார்கள். இந்த ஆட்சியில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்குஅடுத்த அமையும் ஆட்சியில் நியாயம் வழங்கப்படும். தமிழகத்தில் அதிமுக, திமுகவின் அரசியல் போக்குப்பிடிக்காமல் திசை தெரியாமல் உள்ள இளைஞர்களை ஈர்க்க முடியும் என்று நம்புகிறேன்.
அவர்களையும், ரஜினி மன்ற நண்பர்களையும் அரவணைப்பது என் கடமை. அந்த இளைய தலைமுறையின்கையில் தமிழகத்தின் ஆட்சியை ஒப்படைக்கும் பணி எனக்கு உள்ளது. தமிழகத்தில் தேசிய சக்தியை மீண்டும்ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டு வரும் சபதம் ஏற்போம் என்றார் ப.சிதம்பரம்.












Click it and Unblock the Notifications