வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா?: கருணாநிதி கேள்வி
சென்னை:
காயப்பட்டுக் கிடக்கும் அரசு ஊழியர்களின் புண்ணுக்கு மருந்தாக இருக்க வேண்டியதை விட்டுவிட்டு, வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சலுகைகள் பறிப்பு என்ற தமிழக அரசின் கடுமையான நடவடிக்கையால்ஏற்கனவே காயப்பட்டுக் கிடக்கும் அரசு ஊழியர்களின் புண்கள் மீது நிரந்தரப் பணி நீக்கம் போன்றநடவடிக்கைகளை எடுத்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையில் இந்த அராஜக அரசு இறங்கியுள்ளது.
அரசு ஊழியர்கள் ஏதோ மிகப் பெரிய கிரிமினல் செயலைச் செய்துவிட்டதைப் போல தமிழகத்தில் சிலர் பிரச்சாரம்செய்து வருவது வேதனைக்குரியது என்று கூறியுள்ளார்.
அரசு ஊழியர்களுக்காக கண்டனக் கூட்டம்:
இதற்கிடையே எஸ்மா சட்டத்தின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவாகவரும் சனிக்கிழமை தமிழகம் முழுவதும் கண்டனக் கூட்டங்கள் நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு தலைமையில் சென்னையில் இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம் நடந்தது. இதில் திமுக சார்பில் ஆற்காடு வீராசாமி, காங்கிரஸ் கட்சி சார்பில் பீட்டர் அல்போன்ஸ்,மதிமுக சார்பில் எல்.கணேசன், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் உலகரட்சகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில்வரதராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
இக் கூட்டத்தில் எஸ்மா சட்டப்படி லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்ததற்கு கடும் கண்டனம்தெரிவிக்கப்பட்டது.
போராட்டத்தை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வாபஸ் பெற்றுள்ள நிலையில் அவர்கள் மீதானநடவடிக்கைகளை வாபஸ் பெற்று விட்டு பேச்சுவார்த்தைக்கு அரசு முன் வர வேண்டும் என்றும் கூட்டத்தில்கோரிக்கை விடுக்கப்பட்டது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்திற்கு பொது மக்கள் ஆதரவைத் திரட்டும் வகையில் இயக்கம்நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பிறகு நல்லகண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு நிர்வாகம் முற்றிலும் சீர்குலைந்துகிடக்கிறது. லட்சக்கணக்கான பணியாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும்பாதிப்படைந்துள்ளனர். தாற்காலிக ஊழியர்களை மட்டும் வைத்து அரசு நிர்வாகத்தை நடத்த முடியாது.மொத்தத்தில் இது ஜனநாயக நெறிமுறைகளுக்கு முற்றிலும் விரோதமான நடவடிக்கை என்றார்.
ஆற்காடு வீராசாமி கூறுகையில், வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் திமுக மற்றும் தோழமைக் கட்சி எம்.பிக்கள்,தமிழக அரசு ஊழியர், ஆசிரியர் பிரச்சினையை கிளப்புவோம் என்றார்.