நெய்வேலி சுரங்கத்தில் கொள்ளை முயற்சி: பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு
நெய்வேலி:
நெய்வேலி சுரங்கத்தில் இன்று அதிகாலை கொள்ளை முயற்சி நடந்தது. இதையடுத்து கொள்க்ை கும்பல் மீது தொழில்துறை பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
கொள்ளை கும்பல் நடத்திய கல் வீச்சுத் தாக்குதலில் ஒரு வீரர் காயமடைந்துள்ளார்.
நெய்வேலியில் உள்ளமுதல் சுரங்க பகுதியில் பல கோடி மதிப்புள்ள எந்திரங்கள் இயங்கி வருகின்றன. இதையடுத்து இங்கு 24 மணி நேரமும் மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எஸ்- 8 என்ற பிரிவில் உள்ள எந்திரங்கள், சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுக்கப்படும் நிலக்கரி கன்வேயர் பெல்டுகள் மூலம் திருப்பி விடும் பணியை செய்து வருகின்றன. இந்த எந்திரங்கள் உள்ள பகுதியில் அதிகாலை 4 மணியளவில் 50 பேர் கொண்ட மர்ம கும்பல் அத்துமீறி உள்ளே நுழைந்தது.
அங்கிருந்த விலை உயர்ந்த எந்திரங்களையும், பல லட்சம் மதிப்புள்ள இரும்புப் பொருட்களையும் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் இக் கும்பல் நுழைந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்து மத்தியப் படை வீரர்களான குமாரும், நாகராஜனும் அவர்களை நோக்கி விரைந்தனர்.
ஆனால், அக் கும்பல் கற்களையும், நிலக்கரிக் கட்டிகளையும் எடுத்து வீரர்கள் மீது வீசியது. இதில் ஒரு வீரருக்கு மண்டை உடைந்தது. இதையடுத்து தங்களிடம் இருந்த எஸ்.எல்.ஆர்.துப்பாக்கிகளால் வானத்தை நோக்கி நோக்கி வீரர்கள் சுட்டனர்.
இதையடுத்து அந்தக் கும்பலை நோக்கியும் துப்பாக்கிகளை வீரர்கள் திருப்பினர். தங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படலாம் என்பதை உணர்ந்த அக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
காயமடைந்த குமார், என்.எல்.சி.மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாலையில் நடந்த துப்பாக்கி சூடு நெய்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.