ஈரோட்டில் ஒரு "மகாநதி" குடும்பம்
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண், 6 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தனதுமகள் மற்றும் பிரிந்து போன கணவரை கடும் போராட்டத்திற்குப் பிறகு மீட்டுள்ளார்.
வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. சர்க்கஸ் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் சாந்திஎன்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்கு ராஜேஸ்வரி,முத்துலட்சுமி என்ற இரு மகள்கள் பிறந்தனர்.
இந் நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஸ்வயும், ராஜாவும் காணாமல் போயினர். அவர்களை சாந்திதேடாத இடம் இல்லை. எங்கு போனார்கள் என்பதே தெரியவில்லை.
ராஜா சர்க்கஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் என்பதால் ஒருவேளை சர்க்கஸ் நிறுவனத்தில் மகளையும் சேர்த்துவிட்டாரோ என்ற சந்தேகத்தில் எங்கு சர்க்கஸ் நடக்கிறதோ அங்கெல்லாம் சென்று பார்ப்பது சாந்தியின் வழக்கமாகமாறியது. இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களுக்கும் சென்று ஒவ்வொரு சர்க்கஸ்கம்பெனியாக ஏறி இறங்கித் தேடி வந்தார்.
இந் நிலையில் கடந்த 9ம் தேதி ஈரோட்டில் ராயல் சர்க்கஸ் நிறுவனம் சர்க்கஸ் நடத்தியது. இங்கும் சாந்தி சென்றுபார்த்தார். அப்போது அந்தரத்தில் கம்பியில் தொங்கி சாகசம் செய்த சிறுமியைப் பார்த்தபோது அது தனது மகள்ராஜேஸ்வரி தான் என்பதைத் தெரிந்து கொண்டார்.
அதேபோல ராஜேஸ்வரியும் தனது தாயாரை அடையாளம் கண்டு கொண்டார். பின்னர் மகாநதி சினிமாவில்வருவதுபோல, தனது மகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு சர்க்கஸ் நிறுவனத்தினரிடம் கோரினார் சாந்தி.
ஆனால், ராஜேஸ்வயை அவரது தந்தை ராஜா தங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் விட்டுள்ளதாக கூறி தரமறுத்தனர் சர்க்கஸ் நிறுவனத்தினர்.
இதையடுத்து உடனடியாக போலீஸை நாடினார் சாந்தி. போலீஸார் விரைந்து வந்து சர்க்கஸ் நிறுவனத்தினரிடம்பேசி சிறுமியை மீட்டு சாந்தியிடம் ஒப்படைத்தனர். மேலும், வேறொரு சர்க்கஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தகணவர் ராஜாவையும் ராயல் சர்க்கஸ் நிறுவனத்தினர் மூலமாக வரவழைத்து சாந்தியிடம் ஒப்படைத்தனர்.
6 ஆண்டுகளாக காணாமல் போயிருந்த மகளும், கணவரும் மீண்டும் கிடைத்ததால் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்சாந்தி.
அவருக்கு இப்போது ஒரே ஒரு பிரச்சினைதான். இத்தனை காலமாக வட இந்தியாவில் சர்க்கஸ் நிகழ்ச்சிகளில்சுற்றித் திரிந்ததால், ராஜேஸ்வரிக்கு தமிழ் சுத்தமாகத் தெரியவில்லை. இந்தியில் மட்டுமே பேசுகிறாள்.
தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாத சாந்திக்கு அவள் பேசுவது எதுவும் புரியவில்லை.
அதனால் என்ன, அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?