மதுரை, கடலூரில் ஒரே நாளில் 8 கைதிகள் எஸ்கேப்
மதுரை - கடலூர்:
மதுரையிலும் கடலூரிலும் ஒரே நாளில் 8 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் சிறைக் கைதிகளுக்கென தனி வார்டு உள்ளது. மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, உடல் நலம் பாதிக்கப்படும் கைதிகள் இந்த வார்டில் சேர்க்கப்படுவார்கள்.
இதனால் இந்த வார்டில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீசார் காவலில் இருப்பார்கள். ஏட்டையா தலைமையில் 6 ஆயுதப் படை போலீசார் ஷிப்ட் முறையில் பாதுகாப்பை மேற்கொள்வார்கள்.
இந்த வார்டில் 26 கைதிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த வார்டில் கைதிகள் இருக்கும்போது வெளிப்பக்கமாக அந்த அறை பூட்டப்பட்டிருக்கும்.
சால்னா பாண்டி:
நேற்றும் அதே போல பூட்டப்பட்டிருந்தது. இந் நிலையில் அதிகாலை 2 மணியளவில் இந்த அறையின் உள்ள இற்றுப் போன ஜன்னலை உடைத்துவிட்டு ராஜா (40), கருவாயன் என்ற சால்னா பாண்டி (35), கந்தசாமி (31), சண்முகக்கனி (24) ஆகிய நான்கு கைதிகளும் தப்பியோடிவிட்டனர்.
இதில் ராஜாவும் சண்முகக்கனியும் கொலைக் குற்றவாளிகள். ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தவர்கள். கருவாயன் என்ற சால்னா பாண்டி வழிப்பறிக் கொள்ளையன் ஆவான். வெறும் பாண்டியான இவன், மதுரை பரோட்டா கடைகளில் தரப்படும் சால்னாவை அப்படியே குடிப்பானாம். இதனால் இவனுக்கு தரப்பட்ட செல்லப் பெயர் தான் சால்னா பாண்டி.
கந்தசாமி வீடுகளில் புகுந்து திருடி வந்தவன்.
இந்த நான்கு பேரும் ஒரே வாரத்தில் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி மருத்துவமனையில் வந்து சேர்ந்துள்ளனர். மேலும் சால்னா பாண்டி ஏற்கனவே இந்த வார்டில் அனுமதிக்கப்பட்டுத் திரும்பியவனாம். அப்போதே இந்த வார்டின் சிதிலமடைந்த ஜன்னல்களை நோட்டம் பார்த்துவிட்டுச் சென்றுள்ளான்.
இதன் பின்னர் தான் இந்த நான்கு பேரும் திட்டம்போட்டு, உடல் நலம் பாதிக்கப்பட்டது போல நடித்து மருத்துவமனையில் சேர்ந்து தப்பியுள்ளனர்.
இவர்கள் தப்பியபோது ஏட்டையா உள்ளிட்ட போலீசார் வார்டுக்கு வெளியே கொசு விரட்டுவதிலும் தூங்குவதிலும் தீவிரமாக இருந்ததாகத் தெரிகிறது.
கடலூரில் 4 பேர் தப்பியோட்டம்:
இதே போல கடலூரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு திரும்ப சிறைக்கு அழைத்து வரப்பட்ட 4 கைதிகள், மத்திய சிறையை நெருங்கியவுடன் தப்பியோடியுள்ளனர்.
இரண்டு சக்கர வாகனங்களைத் திருடி வந்த செல்வமுத்து (21), குமார் (30), கலாம் (30), சுரேஷ் (25) ஆகியோர் பெண்ணாடம் போலீசாரால் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
காவல் நீட்டிப்புக்காக அவர்களை திட்டக்குடி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர் போலீசார். பாதுகாப்புக்கு ஒரு ஏட்டையா, இரு போலீசார் சென்றனர். காவல் நீட்டிப்பு பெற்று பஸ்சில் கடலூர் திரும்பினர்.
பஸ்சில் இருந்து இறங்கி சிறையை நோக்கி நடந்தபோது, இந்த நால்வரும் தப்பிவிட்டனர்.
சிறையை நெருங்கியபோது குமார் தனக்கு சிறுநீர் வருவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து அவரை ஒரு போலீஸ்காரர் புதர் ஓரமாக அழைத்துச் சென்றார். அப்போது குமார் தப்பியோடினான்.
அவனைப் பிடிக்க போலீஸ்காரர்கள் அனைவரும் ஓட, மற்ற மூன்று கைதிகளும் தப்பியோடிவிட்டனர்.