ரூ. 30 லட்சம் சொத்து: மாஜி திமுக அமைச்சர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல்
மதுரை:
வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கருணாநிதி உள்ளிட்ட பெரும்பாலான முன்னாள் திமுக அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்தது. ஆனால், இதில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் மாஜி அமைச்சர் செல்வராஜ் தான். இவர் திமுக ஆட்சியில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.
அவர் தனது வருமானத்தை மீறி ரூ. 30 லட்சம் சொத்து சேர்த்துள்ளதாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப் பத்திரிக்கையின் நகலைப் பெற சமயநல்லூர் செல்வராஜ், அவரது மனைவி புஷ்பவல்லி, மகள்கள் சிந்தனைச் செல்வி, சித்ரா செல்வி ஆகியோர் மதுரை தலைமை நடுவர் நீதிமன்றத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
அவர்களிடம் 80 பக்கம் கொண்ட குற்றப் பத்திரிக்கை வழங்கப்பட்டது. இதன் பின்னர் வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
செல்வராஜ் குடும்பத்தினருக்கு மதுரை கே.கே. நகரிலும் சென்னை திருவான்மியூரில் இரு மகள்கள் பெயரில் தலா ஒரு வீடும், மனைவியின் பெயரில் மானாமதுரையில் நிலமும் உள்ளது. மதுரையில் இக் குடும்பத்தினருக்கு நிலமும் இருப்பதாக குற்றப் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இவை பொய் வழக்குகள் எனவும், இவை அனைத்தும் நான் நேர்மையான வழியில் ஈட்டிய சொத்துக்கள் எனவும் கூறியுள்ளார் செல்வராஜ்.












Click it and Unblock the Notifications