30 வருடமாய் இழுத்தடிக்கப்பட்ட வழக்குக்கு ஒரே நாளில் அதிரடி தீர்ப்பு
சென்னை:
30 வருடமாக நடந்து கொண்டிருந்த ஒரு வழக்கை,மக்கள் நீதிமன்றம் விசாரித்து ஒரே நாளில் தீர்ப்பு வழங்கியது.
சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி செட்டியார். இவர் தனது வீட்டை 30வருடங்களுக்கு முன்பு நடராஜன் என்பவருக்கு மாதம் ரூ. 250க்கு வாடகைக்கு விட்டார்.
ஆனால் நடராஜன் வாடகையும் சரியாக கட்டாமல், வீட்டையும் காலி செய்யாமல் இருந்துள்ளார்.
இதையடுத்து பலமுறை வலியுறுத்தியும் நடராஜன் வீட்டைக் காலி செய்ய மறுத்து வந்தார். இதனால் கோர்ட்டில்வழக்குத் தொடர்ந்தார் செட்டியார்.
ஆனால் ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. கடந்த 30 வருடங்களாக வழக்கு நடந்து வந்தது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள சட்ட சேவைக் குழுவை அணுகினார். அவரது வழக்கு மக்கள்நீதிமன்றத்தில்(லோக் அதாலத்) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில், நடராஜன் 10 மாதத்தில் வீட்டைக் காலி செய்து விட வேண்டும். அதுவரை மாதந்தோறும் ரூ. 2500 வாடகைகொடுக்க வேண்டும், ஒவ்வொரு மாதம் 10ம் தேதிக்குள் வாடகைப் பணத்தை செட்டியாரிடம் கொடுக்க வேண்டும்.
தவறினால் உடனடியாக வீட்டைக் காலி செய்து விட வேண்டும் என்று தீர்ப்பு கூறப்பட்டது.
30 வருடங்களாக பட்டு வந்த அவஸ்தை லோக் அதலாத் மூலம் முடிவுக்கு வந்தது திருப்தி தருவதாக செட்டியார்குறிப்பிட்டார்.