ஆர்.எஸ்.எஸ். தொண்டருக்கு "லிப்ட்" கொடுத்த முஸ்லீம் இளைஞருக்கு அபராதம்
தஞ்சாவூர்:
ஜமாத் உத்தரவை மீறி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த இளைஞருக்கு தனது மோட்டார் சைக்கிளில் லிப்ட்கொடுத்த முஸ்லீம் இளைஞருக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து மேலும் ஜமாத்தைச் சேர்ந்த சிலர் தன்னையும், தனது தந்தையையும் தாக்கியதாக அந்த இளைஞர்போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் மேல திருப்பூந்திருத்தி டவுன் பஞ்சாயத்தைச் சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது பாதுஷா. அதேபகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இருவரும் நண்பர்கள், கேபிள் டிவி நடத்தி வருகிறார்கள். சிவக்குமார் பா.ஜ.க,ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளில் உறுப்பினராக இருக்கிறார்.
இதனால் அவருடன் முஸ்லீம் சமுதாயத்தினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று மேலதிருப்பூந்திருத்தி ஜமாத் உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஷாகுல் ஹமீது பாதுஷா, சில நாட்களுக்கு முன்பு தனதுமோட்டார் சைக்கிளின் பின்புறம் சிவக்குமாரை அமர வைத்துக் கொண்டு சென்றார்.
இது ஜமாத் கவனத்திற்கு வந்தது. இதைத் தொடர்ந்து ஷாகுல் ஹமீது மற்றும் அவரது தந்தை இருவரும் ஜமாத்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டனர். அப்போது சிலர் இருவரையும் தாக்கியதாகவும் தெரிகிறது.காயமடைந்த ஹமீதுவின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிவக்குமாருடன் சேரக் கூடாது என்ற தடையை மீறியதற்காக ஹமீதுவுக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால் தான் சட்டவிரோதமான காரியம் எதிலும் ஈடுபடவில்லை என்று கூறிய ஹமீது அபராதப் பணத்தைக் கட்டமறுத்து விட்டார். தானும், சிவக்குமாரும் சேர்ந்து கேபிள் டிவி நடத்துவதால், அவருடன் பேசாமல், பழகாமல்எப்படி தொழில் செய்ய முடியும் என்று அவர் கூறி விட்டார்.
இந்த நிலையில் தன்னையும், தனது தந்தையையும் ஜமாத் கூட்டத்தில் சிலர் தாக்கியதாக கூறி நடுக்கரை போலீஸ்நிலையத்தில் ஹமீது புகார் கொடுத்துள்ளார்.
இருப்பினும், ஜமாத் அளவிலேயே இதற்கு தீர்வு காண போலீஸார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.