கண்ணப்பன் கட்சிக்கு வயசு 4 !
சென்னை:
மக்கள் தமிழ் தேசம் ஜாதிக் கட்சி அல்ல என்று அதன் தலைவரும் மாஜி மந்திரியுமான எஸ்.கண்ணப்பன்கூறியுள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன் தமிழகத்தில் புற்றீசல் போல ஜாதிக் கட்சிகள் தோன்றின. இதில் கோனார் இனமக்களின் ஓட்டுகளைக் குறி வைத்து மக்கள் தமிழ் தேசம் கட்சியைத் துவக்கினார் கண்ணப்பன். திமுகவுடன்கூட்டணி அமைத்து 4 இடங்களையும் பெற்றார். இதற்காக திமுகவுக்கு பெரும் தொகையை அவர் தந்ததாகவும்அப்போது கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால், அந்தத் தேர்தலில் எல்லா ஜாதிக் கட்சிகளுக்கும் தமிழக மக்கள் பாடம் புகட்டினர். இதனால் பல ஜாதிக்கட்சிகளும் இருந்த இடம் தெரியாமல் போயின.
ஆனால், கண்ணப்பனின் பண பலம் காரணமாக அவரது கட்சி நிலைத்துக் கொண்டுள்ளது. இன்றுடன் 3 ஆண்டைநிறைவு செய்து 4-வது ஆண்டில் காலெடுத்து வைக்கிறது.
இதையொட்டி கண்ணப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சாதிக் கட்சிகளை கூட்டணி சேர்க்க மாட்டோம்என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஜாதிகளை மையமாக வைத்துத்தான் ஒவ்வொருவேட்பாளரையும் அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் நிறுத்துகின்றன. இதை கருணாநிதியால் கூட மறுக்க முடியாது.
நாங்கள் ஜாதிக் கட்சி அல்ல, ஜாதி வெறியை தூண்டுவது எங்களது வேலை அல்ல. அனைத்து சமுதாய மக்களுக்கும்உழைக்கவே இந்தக் கட்சி தொடங்கப்பட்டது. யாருடனும் கூட்டணி சேர நாங்கள் துடிக்கவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸும், நானும் சேர்ந்து சமூக நீதிப் பேரவையைத் தொடங்கி,சமுதாய மோதல்களைத் தடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம். எங்களால் ஒற்றுமைதான் ஏற்படும்,பிரச்சினை வராது.
கட்சியின் 4-வது ஆண்டு விழா புதன்கிழமை முதல் ஒரு ஆண்டு வரை நடைபெறும். தமிழகம் முழுவதிலும் பொதுக்கூட்டங்கள், கொடியேற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.