வரதட்சணை கேட்ட மாப்பிள்ளையை உதறிய பெண்
கோயம்பத்தூர்:
கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே, வரதட்சணை கேட்ட மணமகனை, தாலிகட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு உதறினார் 21 வயதே ஆன இளம் பெண்.
உடுமலைப்பேட்டை அருகே உள்ள பலமன்னூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் ராணி. இவருக்கும்,நாச்சிமுத்து என்பவருக்கும் திருமணம் நடப்பதாக நிச்சயிக்கப்பட்டது. மணமகன் சரியானவேலையில் இல்லாமல் இருந்தபோதிலும் அவருக்கு ஒரு பவுன் நகை, ரூ. 25,000 ரொக்கம்வரதட்சணையாக கொடுப்பதாக ராணியின் பெற்றோர் கூறியிருந்தனர்.
திருமணத்திற்கு முன்பே ரூ. 10,000 ரொக்கமும், ஒரு பவுன் நகையையும் கொடுத்து விட்டனர்.பாலதண்டாயுதபாணி கோவிலில் கல்யாணம் இன்று நடப்பதாக இருந்தது. இந்த நிலையில் தாலிகட்டும் முகூர்த்த நேரம் நெருங்கியபோது, மணமகள வீட்டாரிடம், மீதமுள்ள வரதட்சணைப்பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று நாச்சிமுத்துவின் வீட்டார் வற்புறுத்தியுள்ளனர்.
பணத்தைதக் கொடுத்தால்தான் தாலி கட்டுவோம் என்று நாச்சிமுத்து குடும்பத்தினர் கூறி விட்டனர்.ராணியின் பெற்றோர் தாலியை முதலில் கட்டக் கூறுங்கள். பின்னர் மீதமுள்ள பணத்தைக் கொடுத்துவிடுவதாக கெஞ்சினர். ஆனால் அதை அவர்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் ராணி கொதித்தெழுந்தார். சென்னைப் பெண் வித்யாவைப் போல, எனக்கு இந்தமாப்பிள்ளையே வேண்டாம் என்று கழுத்தில் போட்டிருந்த மாலையை கழற்றி வீசினார். ஏற்கனவேகொடுத்த ரூ. 10,000 பணம் மற்றும் ஒரு பவுன் நகையை இப்போதே எடுத்து வைத்து விட்டுநடையைக் கட்டுங்கள் என்று மாப்பிள்ளை வீட்டாரைப் பார்த்து ஆவேசமாக கூறினார்.
ஆனால் கொடுக்க முடியாது என்று நாச்சிமுத்துவும் அவரது உறவினர்களும் வீம்பாக கூறியுள்ளனர்.இதைத் தொடர்ந்து போலீஸ் நிலையம் சென்ற ராணி அங்கு புகார் கொடுத்தார். உடனடியாக மகளிர்காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து நாச்சிமுத்து, அவரது பெற்றோர் மற்றும் 3 உறவினர்கள்மீது வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால் போலீஸார் வரப் போவதைத் தெரிந்து கொண்ட நாச்சிமுத்து அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் உடுமலைப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.