தேர்தலை புறக்கணிக்கிறது விடுதலைச் சிறுத்தைகள்
மதுரை:
பாப்பாபட்டி, கீரிப்பட்டி மற்றும் நாட்டார்மங்கலம் ஆகிய பஞ்சாயத்துகளுக்கான தேர்தலை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்கும் என்று அந்தக்கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்த முறை நடந்த தேர்தல்களில்போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தை வேட்பாளர்கள் இன்னும் தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப முடியவில்லை.அவர்களது உயிருக்குப் பாதுகாப்பில்லை.
அப்படிப்பட்ட கேடு கெட்ட நிலை நிலவுகிறது.
இந் நிலையில் மீண்டும் அக்டோபர் 9ம் தேதி தேர்தல் நடக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
ஆனால், தலித் மக்களுக்கு பாதுகாப்பில்லாத இந்த தேர்தலை நாங்கள் புறக்கணிக்கப் போகிறோம் என்றார்.
கடந்த முறை தேர்தல் நடந்தபோது விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மட்டுமே தலித்கள் போட்டியிட்டனர்.வெற்றியும் பெற்றனர். ஆனால், பதவியேற்ற கையயோடு அதை ராஜினாமா செய்துவிட்டு ஊரில் இருந்துவெளியேற வேண்டிய நிலைக்கு வென்றவர்கள் தள்ளப்பட்டனர் என்பது நினைவுகூறத்தக்கது.
தலித்களை தலைவர்களாக ஏற்க தேவர் இனத்தில் சிலர் முன் வராததால் தான் இந்த நிலை நிலவுகிறது.
தலித் எதிர்ப்பைக் கைவிடச் செய்து எப்படியாவது தேர்தலை நடத்திவிடும் முயற்சியாகத் தான் தேவர் சமூகத்தைச்சேர்ந்த அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு சமாதானக் குழுவை அரசு இப்போது அமைத்துள்ளது.
தலித் பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்த முடியாத தமிழக அரசுக்கு பல்வேறு தேசிய அமைப்புகளிடம் இருந்துநெருக்கடி வர ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.