தீபாவளிக்குப் பின் கூடுகிறது சட்டசபை
சென்னை:
தீபாவளிக்குப் பின், அக்டோபர் 24ம் தேதி சட்டமன்றத்தின் மழைக் காலக் கூட்டத் தொடர் தொடங்கலாம் என்றுதெரிகிறது.
இந்தக் கூட்டத் தொடரின்போது, மழை நீர் வடிகால், கந்து வட்டி ஒழிப்பு, கூட்டுறவு வங்கிகளின் தனிஅதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டிப்பது உள்ளிட்ட மொத்தம் 5 சட்ட மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன.
மேலும் 2003 -04 ஆம் ஆண்டுக்கான மின் வாரிய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும்.
முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன், முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.பாலசுப்ரமணியம் மற்றும் மறைந்தமுன்னாள் எம்.எல்.ஏக்கள் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
அக்டோபர் 24ம் தேதி ஆரம்பிக்கும் கூட்டத் தொடர் ஒரு வார காலம் நடக்கும். கடந்த ஆண்டு அக்டோபர் 24ம்தேதி முதல் 31ம் தேதி வரை இக் கூட்டத் தொடர் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு மே 10ம் தேதியுடன் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்தது. விதிமுறைப்படி, வரும்நவம்பர் 10ம் தேதிக்குள் (அதாவது 6 மாதத்திற்குள்) சட்டசபை கூட்டப்பட வேண்டும்.