3வது ஆண்டாக குறுவை பயிரை இழக்கிறது தமிழகம்: பிரதமரை சந்திக்க எதிர்க் கட்சிகள் முடிவு
சென்னை:
காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி திமுக, பா.ம.க, மதிமுக,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பா.ஜ.க. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழு பிரதமர் வாஜ்பாயை நேரில்சந்திக்கவுள்ளது.
அக்டோபர் முதல் வாரத்தில் இச் சந்திப்பு நடக்கிறது.
இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூட்டிய அனைத்து எதிர்க் கட்சிகள் கூட்டத்தில் இந்த முடிவுஎடுக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் கூட மதிக்க மறுத்து வரும்கர்நாடகத்தின் செயல் நாட்டின் கூட்டாட்சி முறைக்கே எதிராக உள்ளது. இதனால் தமிழக காவிரிப் படுகைவிவசாயிகள் சந்தித்து வரும் துயரம் சொல்லி மாள முடியாதது.
இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை தமிழகத்துக்கு கர்நாடகம் 157 டி.எம்.சி. நீரைத் தந்திருக்க வேண்டும்.ஆனால், வெறும் 24 டி.எம்.சி. நீரைத் தான் இதுவரை தந்துள்ளது. அதுவும் மழை பெய்யயும்போது தனதுஅணைகளில் இதற்கு மேல் நீரைத் தேக்க முடியாது என்ற நிலை வரும்போது மட்டும் பெயருக்கு தண்ணீரைத்திறந்துவிட்டு வருகிறது.
இதனால் இந்த ஆண்டும் குறுவைப் பயிரை இழந்துவிட்டு நிற்கிறார்கள் தமிழக காவிரிப் பாசன க விவசாயிகள்.மொத்தத்தில் 3வது ஆண்டாக பயிரிட முடியாத மிக மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆறுகளை தனது கட்டுப்பாட்டில் எடுப்பது குறித்து மத்திய அரசு யோசிக்க வேண்டும். அரசியல்சட்டப்படி மத்திய அரசுக்கு அந்த உரிமை உண்டு.
நதிகளை இணைப்பது எல்லாம் மிக நீண்ட காலம் பிடிக்கும் வேலை. இதனால், உடனடியாக ஆறுகளை தனதுகட்டுப்பாட்டில் எடுத்து அனைத்து மாநிலங்களுக்கும் உரிய நீர் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த வேலையை உடனடியாகச் செய்ய வேண்டும். இதற்கு தேவைப்பட்டால் அரசியல் சட்டத்தில்திருத்தம் கூட கொண்டு வரலாம் என்றார் ராமதாஸ்.