மாண்டவர் மீண்டார்: இறுதிச் சடங்கில் எழுந்து உட்கார்ந்த இறந்தவர்
கரூர்:
கரூர் அருகே இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட முதியவரை குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது அவர் எழுந்துஉட்கார்ந்ததால் அங்கு பெரும் பீதியும், பரபரப்பும் ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் கே.பரமத்தி அருகே உள்ள மூலப்பாளையம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. 80வயதான இவர் கடந்த 3 நாட்களாக மூச்சுப் பேச்சு இல்லாமல் கிடந்தார். சாப்பாடும் உட்கொள்ளவில்லை.
இந் நிலையில் வியாழக்கிழமை இரவு வேலுச்சாமியைச் சுற்றிலும் அமர்ந்திருந்த அவரது உறவினர்களில் சிலர்வேலுச்சாமி இறந்து விட்டதாக நினைத்தனர்.
அதை உறுதி செய்துகொள்ள, முகத்தில் தண்ணீர் தெளித்துப் பார்த்தனர். ஒரு அசைவும் இல்லை. வாயில் தண்ணீர்ஊற்றிப் பார்த்தனர், வாயினுள் செல்லாமல் தண்ணீர் வெளியேறியது.
இதையடுத்து வேலுச்சாமி இறந்தாக நினைத்துக் கொண்டு வாயில் பாலை ஊற்றினர். தடைக்கும் தலைக்கும் கட்டுபோட துணி தயாரானது. தலைமாட்டில் விளக்கும் வைக்கப்பட்டது. ஊதுபத்திகள் கொளுத்தப்பட்டன.
நெற்றியில் ஒட்ட எட்டணா, பிணத்துக்கு சுற்றும் துணி என இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளில் உறவினர்கள்இறங்கினர்.
பெண்களின் அழுகைக்கு இடையே கட்டிலில் படுக்க வைக்கப்பட்ட வேலுச்சாமியின் உடலை உறவினர்கள்குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது அவரது உடலில் அசைவு தெரிந்தது. படுத்த நிலையில் உடலில் நீர்ஊற்றப்பட்ட நிலையில் மெதுவாக எழுந்து உட்கார்ந்தார் வேலுச்சாமி.
இதைப் பார்த்த சிலர் பயத்தில் அலற, உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். காண்பது கனவா, நனவா என்றுதெரியாமல் சிறிது நேரம் சிலையாகினர்.
அனைவரும் சுய நினைவுக்கு வர சில வினாடிகள் பிடித்தது. அதன் பின்னர் அனைவரும் பெரும் மகிழ்ச்சியுடன்வேலுச்சாமியை ஆரத் தழுவிக் கொண்டனர்.
அனைவருக்கும் விருந்தும் போடப்பட்டது. இறந்துவிட்ட வேலுச்சாமி மறு பிறவி எடுத்து திரும்பவும் பூமிக்குவந்துள்ளதாக அந்தப் பகுதி கிராம மக்கள் பேசிக் கொள்கின்றனர்.