டெல்லி திரும்பினார் கலாம்: இரு நாட்களில் பொடா சட்ட திருத்தம்
டெல்லி:
ஜனாதிபதி அப்துல் கலாம் தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்பினார்.இதையடுத்து பொடா திருத்தம் குறித்த அவசரச் சட்டம் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின் முதன்முறையாக யு.ஏ.இ, சூடான், பல்கேரியா ஆகிய நாடுகளில் ஒரு வாரகாலம் சுற்றுப் பயணம் மேற்கொண்ட கலாம் இன்று காலை டெல்லி திரும்பினார்.
அவரைத் துணைப் பிரதமர் அத்வானி, கேபினட் செயலாளர் கமால் பாண்டே, உள்துறைச் செயலாளர் கோபாலசுவாமி, முப்படைகளின் தலைவர்கள் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
வெல்கம் பேக் டு இந்தியா என்று சொல்லி அத்வானி கை கொடுக்க, அவரது கைகளை இறுகப் பற்றி சிரித்தவாரேகை குலுக்கினார் கலாம்.
பொடா மறு ஆய்வுக் கமிட்டியின் உத்தரவுகளை மாநில அரசுகள் நிறைவேற்றும் வகையில் அதற்கு அதிகஅதிகாரம் தர மத்திய அரசு கடந்த 21ம் தேதி முடிவு செய்தது. ஜனாதிபதி நாடு திரும்பிய பின் இது தொடர்பானஅவசர சட்டத் திருத்த உத்தரவை வெளியிடவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடு திரும்பிய கலம், இரண்டு நாட்களில் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது.
பொடா சட்டத் திருத்தம் எல்லாம் தேவையில்லை, அந்தச் சட்டமே நீக்கப்பட வேண்டும் என்பதில் திமுக தீவிரமாகஉள்ளது. திமுகவின் நெருக்குதலால் தான் இந்த சட்டத் திருத்தத்தையே மத்திய அரசு கொண்டு வர முடிவு செய்தது.