புதிய தலைமை செயலக விழா: பச்சை வண்ண அழைப்பிதழ் தயார்- ஆளுனர் பெயர் இல்லை
சென்னை:
புதிய தலைமைச் செயலக அடிக்கல் நாட்டு விழா அழைப்பிதழில் தமிழக ஆளுனர், அண்ணா பல்கலைக்கழகத்துணைவேந்தர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை.
சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.450 கோடியில் கட்டப்படும் புதிய தலைமைச்செயலக அடிக்கல் நாட்டு விழா வரும் 30ம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. முதல்வர் அடிக்கல்லைநாட்டுகிறார்.
அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளும் இவ்விழாவின் அழைப்பிதழில் வீட்டு வசதித்துறைஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை பெருநகர வளர்ச்சித் துறை துணைத்தலைவர் ஜெயந்தி, உறுப்பினர்செயலர் சம்பத் ஆகியோர் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.
தென் சென்னை தொகுதி எம்.பி., டி.ஆர்.பாலு, தமிழக ஆளுநரும் அண்ணா பல்கலைக்கழக வேந்தருமானராம்மோகன் ராவ், துணைவேந்தர் பாலகுருசாமி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற வில்லை.
ஜெயலலிதாவுக்கு ராசியான பச்சை வண்ணத்தில் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது.
அமைய உள்ள கட்டடங்கள் குறித்து அழைப்பிதழில் கூறப்பட்டுள்ள வர்ணனை:
- 43.20 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்படும் பொலிவு கொண்ட இக்கட்டிடம் கட்டிடக் கலையின் காவியம், எண்ணற்ற சிறப்பு கொண்ட எழிலோவியம்.
- விசாலமான பரந்து விரிந்த வியக்கத்தக்க, விந்தை, இந்த தலைமைச் செயலகம்.
- கட்டிட கலையின் சிகரம், சென்னை மாநகரின் புகழ் சேர்க்கும் மணிமகுடம்.
- தரைத்தளம் மற்றும் 5 தளங்கள், அதிநவீன வசதிகள் நிறைந்த சட்டசபை வளாகம்.
- சட்டப்பேரவை உறுப்பினர் குழுக்களுக்கு அனைத்து வசதிகளும் கொண்ட தனி அறைகள்.
- டெல்லி விஞ்ஞான் பவன் கட்டிடத்தைப் போன்ற நவீன வசதிகளுடன் தோற்றப் பொலிவும் கலைநயமும் கொண்ட 2,000 பேர் அமரக் கூடிய பிரம்மாண்ட அரங்கு.
- முதலுதவிப் பிரிவு, மருந்தகம், நவீன கணிணி மையம், பதிவு அறைகள், நூலகங்கள், காவல், பாதுகாப்பு, தீயணைப்பு வசதிகள், பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு அறைகள், சிற்றுண்டிச் சாலை, கடைகள், குழந்தைகள் காப்பகம், வாகனங்கள் பழுது பார்க்கும் இடம், எரிபொருள் நிரப்பும் இடம், அமைச்சர்கள், விருந்தினர்கள், அலுவலகர்கள் மற்றும் பொது மக்களுக்கான தனித்தனி வாகனங்கள் நிறுத்துமிடம்.