தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்
பெங்களூர்: சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகள் திருடு போயிருக்கின்றன. இந்த ஹார்ட் டிஸ்குகள், கடந்த ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கில் தொடர்பு உடையதாக பல்வேறு கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இப்படியான சூழலில் தவெக அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்த சூழலில் தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து வெளியான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் ரூ.75 ஆயிரத்துக்கு பெங்களூருவில் விற்பனை செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக பெங்களூரு கம்ப்யூட்டர் நிறுவன அதிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சென்னை அண்ணாசாலையில் தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் 34 'ஹார்டு டிஸ்க்குகள்' திருட்டுப்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து சென்னை சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் கம்ப்யூட்டர்களை மேற்பார்வையிடும் ஊழியராக பணியாற்றி வந்த 31 வயதாகும் கோபிநாத் என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் கம்ப்யூட்டர் 'ஹார்டு டிஸ்க்குகளை' திருடி, பெங்களூருவில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் விற்பனை செய்ததாக கண்டறியப்படிருந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் பெங்களூரு சென்று 34 'ஹார்டு டிஸ்க்குகளையும்' மீட்டனர்.
சிந்தாரிப்பேட்டை போலீசார் கோபிநாத்தை கைது செய்து அழைத்து வந்தனர் . அவரிடம் விசாரித்தபோது, திருடிய 'ஹார்டு டிஸ்க்குகளில்' உள்ள தகவல்களை அழித்துவிட்டு ரூ.75 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளார். அதில் சதி திட்டம் ஏதும் இல்லை என்றும் கோபிநாத் கூறியுள்ளார். அவர் ஏற்கனவே வேலை பார்த்த நிறுவனத்தில், இதுபோல கம்ப்யூட்டர் 'ஹார்டு டிஸ்க்குகளை' திருடி விற்பனை செய்துள்ளதும் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
'ஹார்டு டிஸ்க்குகள்' திருட்டு சம்பவத்தில் சதி திட்டம் ஏதும் இருப்பதாக இதுவரை நடந்த விசாரணையில் தெரியவில்லை என்றும், பின்னணியில் யாரும் இருப்பதாகவும் விசாரணையில் கண்டறியப்படவில்லை என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தாலும், தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனிடையே இந்த வழக்கில் 'ஹார்டு டிஸ்க்குகளை' வாங்கிய பெங்களூரு கம்ப்யூட்டர் நிறுவன அதிபர் முரளி மனோகர் என்பவரும் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடப்பதாகவும், விசாரணைக்கு பிறகு நீதிமன்ற காவலில் அவர் சிறைக்கு அனுப்பப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications