ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்?
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த பொருளாதார நிபுணரும் அரசியல் வியூக வகுப்பாளருமான பிரவீன் சக்கரவர்த்தி, ராகுல் காந்திக்கு நெருக்கமானவர். அதே நேரத்தில் தமிழக முதல்வர் விஜய்யுடன் நல்ல நட்புறவை கொண்டு இருப்பவர். சென்னையில் பிறந்த பிரவீன் சக்கரவர்த்தியின் பின்னணி குறித்த விவரங்களை இங்கு பார்க்கலாம்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம், சட்டமன்ற தேர்தலில் மயிலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், தனது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காலியாக உள்ள அந்த எம்பி பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிக எம்.எல்.ஏக்களை கொண்ட தவெக நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்த நிலையில் ஒரு எம்பி இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு தவெக ஒதுக்கியது.

அந்த எம்பி பதவிக்கு ராகுல் மற்றும் விஜய்யின் நண்பராக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தியை வேட்பாளராக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. தவெக நிறுத்தும் வேட்பாளரே வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதால், பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது. ராஜ்யசபா எம்.பியாக உள்ள பிரவீன் சக்கரவார்த்தி யார்? என்ற விவரங்களை பார்க்கலாம்.
சென்னையில் பிறந்தவர்
காங்கிரஸ் கட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ராகுல் காந்தியால் கொண்டு வரப்பட்டவர் பிரவீன் சக்கரவர்த்தி. தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட இவர், சென்னையில் பிறந்தவர். பிட்ஸ் பிலானி என்ஜினியரிங் கல்லூரியில் படித்த பிரவீன் சக்கரவர்த்தி, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் வார்ட்டன் ஸ்கூலில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார். ஐபிஎம், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார்.
பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற பிரவீன் சக்கரவர்த்தி கடந்த 2009 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியின் போது அரசின் விஷேச திட்டங்களி பங்கு பெற்றார். அப்பொதுதான் அவருக்கு ராகுல் காந்தியுடன் அறிமுகம் கிடைத்தது. தற்போது காங்கிரஸின் தரவு பகுப்பாய்வுத் துறைக்கும், தொழில் வல்லுநர்கள் அணிக்கும் தலைமை வகிக்கிறார்.
ராகுல் காந்தியுடன் நெருக்கமான நட்பு
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி சேருவதற்காக பிரவீன் சக்கரவர்த்தி முயற்சித்ததாகவும் பேச்சு எழுந்தன. பிரவீன் சக்கரவர்த்தி விஜய்க்கும் நன்கு பரிட்சயம் ஆனவர். விஜய்யிடம் நட்பு பாராட்டும் பிரவீன் சக்கரவர்த்தி, ராகுல் காந்திக்கும் மிகவும் நெருக்கமான நட்புறவு கொண்டவர்..
தவெக தனக்கு கிடைக்க இருந்த முதல் எம்பி பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியபோதே அதில், பிரவீன் சக்கரவர்த்தியே எம்பியாக நிறுத்தப்படுவார் என்று பேசப்பட்டது. தற்போது காங்கிரஸ் மேலிடம் அதனை உறுதி செய்துள்ளது.
இக்கட்டான நேரத்தில் விஜய்க்கு உதவி..
தேர்தல் முடிந்த பிறகு தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தேவைப்பட்டதால் உடனடியாக திமுக கூட்டணியை விட்டு விலகி 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் தவெகவுக்கு ஆதரவு கொடுக்க செய்ததிலும் பிரவீன் சக்கரவர்த்தியின் பங்களிப்பு அதிகம் என்ற பேச்சு இருந்தது. இக்கட்டான நேரத்தில் உடனே கை கொடுத்த காங்கிரஸ் கட்சிக்கு பிரதிபலனாக இரண்டு அமைச்சர்கள் பதவி கொடுத்தது மட்டுமின்றி பிரவீன் சக்கரவர்த்திக்காகவே, இந்த எம்பி பதவியை அக்கட்சிக்கு வழங்க விஜய் விரும்பியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications