சட்டமன்றத்தை ஒட்டுமொத்தமாய் புறக்கணித்த எதிர்க் கட்சிகள்
சென்னை:
சட்டசபையிலிருந்து திமுக, பாட்டாளி மக்கள் கட்சி, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் இன்று வெளிநடப்புச்செய்தனர். மேலும் இன்று முழுவதும் அவைக்குத் திரும்புவதில்லை என்றும் முடிவு செய்தனர். அதே போலமார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் இன்று காலை கேள்வி நேரத்திற்குப் பிறகு திமுக உறுப்பினர் பொன்முடி எழுந்து, தான் கொண்டு வந்த சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேச ஆரம்பித்தார். விழுப்புரம் நகராட்சியை சிறப்பாக செயல்பட விடாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது.
நகராட்சியை சிறப்பான முறையில் இயக்க அரசு உதவி செய்ய வேண்டும் என்றார்.
அதற்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளிக்கையில், விழுப்புரம் நகராட்சி தலைவரின் (அவர் திமுகவைச் சேர்ந்தவர்) நிர்வாக திறமையின்மை காரணமாகவே நகராட்சி நிர்வாகம் முடங்கிக் கிடக்கிறது.
விழுப்புரம் நகராட்சித் தலைவரின் தலைமை சிறப்பாக இல்லாததால், நகராட்சியைக் கலைக்கலாம் என்று சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையர் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார். இருப்பினும் இதுவரை அரசு அந்தப் பரிந்துரையை அமலாக்கவில்லை என்றார்.
அப்போது எழுந்த பொன்முடி, முதல்வரின் பேச்சுக்கு பதில் தர முற்பட்டார்.
ஆனால் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு முதல்வர் நீண்ட பதில் அளித்துள்ளார். முதல்வரின் பதிலுக்கு விளக்கம் அளிக்க அனுமதி கொடுக்கப்படுவதில்லை என்று கூறி அவரது கோரிக்கையை சபாநாயகர் காளிமுத்து நிராகரித்து விட்டார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொன்முடி விளக்கம் அளிக்க வாய்ப்பு தர வேண்டும் என்று திமுக சட்டமன்றத் தலைவர் அன்பழகனும் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை ஏற்க சபாநாயகர் மறுத்தார்.
இதையடுத்து சபையிலிருந்து வெளிநடப்புச் செய்வதாக கூறி திமுக உறுப்பினர்கள் வெளியேறினர்.
இதேபோல, நாகை அரசு விழா, மணிசங்கர் அய்யர் தாக்கப்பட்டது ஆகியவை தொடர்பாக சில கருத்துக்களைக் கூற காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் முயன்றார். அவருக்கும் சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.
அதே போல பாட்டாளி மக்கள் கட்சியும் இன்று வெளிநடப்பில் ஈடுபட்டது. 30 பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொடுத்தும் ஒரு பிரச்சினை குறித்தும் பேச வாய்ப்பு தரவில்லை என்று கூறி ஜி.கே.மணி தலைமையில் பா.ம.க. எம்.எல்.ஏக்கள் வெளிநடப்புச் செய்தனர்.
பின்னர் இந்த 3 கட்சியினரும் இன்று முழுவதும் சபையில் கலந்து கொள்வதில்லை என்று தீர்மானத்து அவையை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தன.
இந் நிலையில் சட்டமன்றத்தில் விவாதம் தொடர்ந்து கொண்டிருந்தது. நிதியமைச்சர் பொன்னையன் பேசுகையில் அரசு ஊழியர் போராட்டத்தை திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் தான் தூண்டிவிட்டன. இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் உடந்தையாக இருந்தன என்றார்.
இதற்கு பதிலளிக்க கம்யூனிஸ்ட் கட்சியினர் எழுந்தனர். ஆனால், அவர்களுக்கு பேச அனுமதி தர காளிமுத்து மறுத்தார். இதையடுத்து அரசுக்கு எதிராக கடுமையான கோஷங்கள் எழுப்பியபடி கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய ஜெயலலிதா, ஜூலை 2 முதல் போராட்டம் நடத்துவதாக சொல்லிவிட்டு, 1ம் தேதியே போராட்டத்தைத் துவக்கினர் அரசு ஊழியர்கள். இந்த விவகாரத்தைப் பேசி தீர்க்கலாம் என்று நினைத்திருந்தபோது தொழிலாளர் சங்கத்தினர் உச்ச நீதிமன்றத்துக்குப் போனார்கள்.
அப்புறம் இதில் நாங்கள் என்ன செய்ய முடியும்?. உச்ச நீதிமன்றத்துக்கு சென்றதற்கான பின் விளைவுகளைத் தான் அவர்கள் அனுபவித்தார்கள். டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியர்களிடம் விசாரணை நடத்திய 3 நீதிபதிகளின் அறிக்கை இன்னும் அரசுக்கு வரவில்லை என்றார்.
டெஸ்மா அவசரச் சட்டத்துக்கு மாற்று உட்பட 7 புதிய மசோதாக்கள் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டன.