ஜனனியை நள்ளிரவில் கைது செய்தது ஏன்?: போலீஸாருக்கு நீதிபதி கடும் கண்டனம்
சென்னை:
இளம் பெண் ஜனனியையும் அவரது தாயாரையும் நள்ளிரவில் கைது செய்து, சென்னைக்கும், மதுரைக்கும் அலைக்கழித்தது ஏன்? எதற்காக இவ்வளவு அவசரப்பட்டு கைது செய்தீர்கள் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கற்பகவிநாயகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜனனியையும், அவரது தாயாரையும், அவசரம், அவசரமாக கைது செய்ததற்கான காரணத்தை இன்னும் ஒரு வாரத்தில் நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு அரசு வக்கீலுக்கு அவர் உத்தரவிட்டார்.
கஞ்சா வழக்கில் ஜனனியும், அவரது தாயாரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களுக்காக பிரபல வக்கீல் கபில் சிபல் ஆஜராகி வருகிறார். நேற்று மீண்டும் சிபல் ஆஜராகி வாதாடினார்.
வாதத்தின்போது அரசு வக்கீல் சுப்ரமணியம் கூறுகையில், ஜனனியின் காரில் கஞ்சா இருப்பதாக ஜூலை 10ம் தேதி இரவு 10 மணிக்குத் தகவல் வந்தது. இதையடுத்து இரவு 11.30 மணியளவில் கார் நிறுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. பின்னர் மதுரை அன்பு நகரில் உள்ள அவரது வீட்டுக்கு ஜனனி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தேடுதல் வேட்டை நடந்தது. பின்னர் இரவு 1.10 மணியளவில் ரமீஜா கைது செய்யப்பட்டார்.
பின்னர் இருவரும் மதுரையிலிருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர். அங்கு நீலாங்கரையில் உள்ள அவர்களது வீடு சோதனையிடப்பட்டது. பின்னர் இரவு 9.30 மணிக்கு மதுரைக்குக் திரும்பவும் கொண்டு வரப்பட்டனர். இரவு 10.30 மணியளவில் சிறையில் அடைக்கப்பட்டனர் என்றார்.
இதைக் கேட்டதும் நீதிபதி கற்பகவிநாயகம் கடும் அதிருப்தியடைந்தார். இரண்டு பெண்களை, போலீஸ் வேனில் மதுரையிலிருந்து சென்னைக்குக் கொண்டு சென்று மறுபடியும் மதுரைக்குக் கொண்டு வந்துள்ளீர்கள். எதற்காக இந்த அவசரம்? அதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது?
ஜனனி மோசமானவரோ, அல்லது கஞ்சா விற்றவரோ, அது குறித்துக் கவலையில்லை. ஆனால் அவரது வீட்டை எதற்காக சீல் வைத்தீர்கள்? நகைகளைக் கூட சீல் வைக்க வேண்டிய அவசியம் என்ன? இதற்கான விடை எனக்குத் தெரிய வேண்டும் என்று கூறி வழக்கை நவம்பர் 14ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.