பெங்களூரில் அத்துமீறிய தமிழக போலீஸ்: கார்கே கண்டனம்
பெங்களூர்:
பெங்களூரில் நடந்த இந்து பத்திரிக்கையின் 125-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து காண்ட இந்து நாளிதழ் இணை நிர்வாக இயக்குநர் எச்.முரளியின் காரை நிறுத்தி தமிழக போலீஸார் அத்துமீறி நடந்து கொண்டனர். இதற்கு கர்நாடகப் போலீஸ் அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்து நாளிதழின் 125-வது ஆண்டு விழா பெங்களூரில் நடந்தது. இதில் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் ஆசிரியர் ரவியைக் கைது செய்வதற்காக தமிழகப் போலீஸ் படை பெங்களூர் வந்திருந்தது.
இந்த நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக என்.ராம், ரவி உள்ளிட்டோர் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஒரு அம்பாசடர் கார் இவர்களது காரை வழிமறித்து நின்றது. அதிலிருந்து இறங்கிய 6 பேர் காரில் உள்ளவர்களை கீழே இறங்கக் கூறினர்.
அவர்கள் அனைவரும் தமிழக போலீஸார் என்பதைப் புரிந்து கொண்ட ரவி, இது தமிழ்நாடு அல்ல, கர்நாடகம் என்று கோபத்துடன் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து இவர் ரவி அல்ல என்று கூறிய அவர்கள் திரும்பிச் சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸில் ரவி புகார் கொடுத்தார். இச்சம்பவத்திற்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் இந்த நடவடிக்கையை சகித்துக் கொள்ள முடியாது. தமிழக போலீஸார் அத்துமீறி நடந்து கொண்டுள்ளனர். அந்த நபர்களையும், வாகனத்தையும் தேடி வருகிறோம். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்வது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வருவதாக ஜெயலலிதா மனம் போன போக்கில் பேசுவது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications