ஜெ.வின் புது அணி யோசனை: இந்திய கம்யூ நிராகரிப்பு
நாகப்பட்டினம்:
ஜெயலலிதா அமைக்க விரும்பும் பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது கூட்டணிக்கு எங்களது ஆதரவு ஒருபோதும் கிடையாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மாநிலத்தில் சர்வாதிகார ஆட்சியும், எதிர்க்கட்சி உறுப்பினர்களை சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியும் மரியாதைக்குறைவாகவும் நடத்தும் அதிமுக அரசை நாங்கள் எப்படி ஆதரிக்க முடியும்?
உரிமைகளை வேண்டி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை இந்த அரசு டிஸ்மிஸ் செய்துள்ளது. அவர்களுக்கு ஆதரவாக நான் பேசியபோது, வேலை நிறுத்தத்தைத் தூண்டியதாக என் மீது டெஸ்மா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று பயமுறுத்தியவர்தானே இந்த ஜெயலலிதா?
மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதாகக் கூறி பொதுமக்களுக்குக் கஷ்டம் ஏற்படும் வகையில் பல புதிய வரிகளை இந்த அரசு விதித்தது. ஆனால் முதலமைச்சரின் சுற்றுப்பயணங்களுக்காக அதிக அளவில் பணத்தைச் செலவழிக்கிறது.
எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி பல கோடி ரூபாய் செலவில் சட்டமன்றம் கட்ட முடிவு செய்துள்ளது. இத்தகைய அதிமுகவுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications