For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்து ஆசிரியர் உள்ளிட்ட 6 பேருக்கு சிறை தண்டனை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இந்தியாவிலேயே இதுவரை நடந்திராத அளவுக்கு, புகழ் பெற்ற தேசிய நாளிதழான இந்து பத்திரிக்கையின் ஆசிரியர் என்.ராம் உள்ளிட்ட 5 பேர் மற்றும் முரசொலி பத்திரிக்கை ஆசிரியர் செல்வம் ஆகியோரை 15 நாள் சிறையில் அடைக்க சபாநாயகர் காளிமுத்து அதிரடியாக தீர்ப்பளித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி நடந்த சட்டசபைக் கூட்டத் தொடரின் போது சபையில் நடந்த நிகழ்ச்சிகள் குறித்து இந்து பத்திரிக்கையில் சிறப்புக் கட்டுரை வெளியாகியிருந்தது. இந்தக் கட்டுரையை தமிழில் மொழி பெயர்த்து முரசொலி அடுத்த நாள் வெளியிட்டது.

இந்துவில் வெளியான கட்டுரை சட்டசபை மற்றும் முதல்வரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக கூறி சட்டசபையில் அவை முன்னவர் சி.பொன்னையன் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் உரிமைக் குழுவின் பரிசீலனைக்கு விடப்பட்டது.

உரிமைக் குழு பரிசீலனைக்குப் பின் அதன் பரிந்துரைகள் சபாநாயகரிடம் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் சபாநாயகர் காளிமுத்து அதிரடியான தீர்ப்பை அடுத்தடுத்து வழங்கினார்.

அதற்கு முன்பாக அவை முன்னவரும், நிதியமைச்சருமான பொன்னையன் எழுந்து தீர்மானம் ஒன்றை வாசித்தார். அப்போது, இந்து நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரையின் ஒரு பகுதி, அவையின் பெயருக்கு பெரும் களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. அவையின் உரிமையில் முழுவதுமாக தலையிடுவதாக அது அமைந்துள்ளது.

எனவே உரிமைக் குழுவின் பரிந்துரைகளின்படி இந்து மற்றும் முரசொலி ஆசிரியர்கள், செய்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் என்று கோரிக்கை வைத்தார். இதை சபாநாயகர் காளிமுத்து குரல் வாக்கெடுப்புக்கு விட்டார். இதைத் தொடர்ந்து தீர்மானம் நிறைவேறியதாக அறிவித்த காளிமுத்து தீர்ப்பை வெளியிட்டார்.

இந்து ஆசிரியர் ராம், நிர்வாக ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி, தலைமை நிருபர் ஜெயந்த், சிறப்பு நிருபர் ராதா வெங்கடேசன், பதிப்பாளர் ரங்கராஜன் ஆகியோரைக் கைது செய்து, அவர்களை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிடுகிறேன். அவர்களுக்கு15 நாட்களுக்கு சட்டசபை செய்திகளை சேகரிக்கவும் தடை விதிக்கப்படுகிறது.

அதேபோல, இந்து நாளிதழில் சட்டசபையை களங்கப்படுத்தும் வகையில் வெளியான செய்தியை, மொழி பெயர்த்து வெளியிட்ட முரசொலி பத்திரிக்கையின் ஆசிரியர் செல்வத்திற்கும் 15 நாள் சாதாரண சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. முரசொலி பத்திரிகைக்கு சட்டசபை செய்திகளை சேகரிக்க 10 நாட்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது என்றார் காளிமுத்து.

அப்போது ஜெயலலிதா எழுந்து, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. என்னைப் பற்றித் தனிப்பட்ட முறையில்தான் இவர்கள் விமர்சித்து எழுதியுள்ளார்கள். ஆனால் சட்டசபையின் புனிதத்தையும் இவர்கள் களங்கப்படுத்தி விட்டதால் தண்டனை கொடுத்தே ஆக வேண்டும் என்று தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X