நார்வே குழு இலங்கை வருகை
கொழும்பு:
இலங்கை அரசியல் கொந்தளிப்பான நிலையில் இருப்பினும், திட்டமிட்டபடி நார்வே அமைதித் தூதுக் குழுவினர் வரும் திங்கள்கிழமை கொழும்பு வந்து சேருவர் என நார்வே தூதரக செய்தித் தொடர்பாளர் தாமஸ் ஸ்டேன்ஜ்லேண்ட் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நார்வே வெளியுறவுத் துறை இணை அமைச்சர் விடார் ஹெல்ஜெசன் மற்றும் வெளியுறவுத்துறை சிறப்பு ஆலோசகர் எரிக் சோல்ஹைம் ஆகியோரின் இலங்கை பயணத் திட்டத்தில் எந்த வித மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்த இரு தூதர்களம் அடுத்த வருடம் எந்தத் தேதிகளில் அடுத்த கட்ட அமைதிப் பேச்சு வார்த்தையைத் தொடங்குவது என்பது குறித்து புலிகளிடமும் அரசிடமும் பேச்சுவார்த்தை நடத்தி தேதிகளை நிர்ணயிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா நேற்றிரவு தொலைக்காட்சியில் பேசுகையில், நார்வே தூதுக்குழு மூலம் விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியுள்ள அமைதி ஒப்பந்தம் சட்ட விரோதமானது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications