இந்து செய்த "தவறுகள்": காளிமுத்து சொன்னது
சென்னை:
இந்து பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளால் சட்டசபைக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் களங்கம் விளைவித்து விட்டதாக சபாநாயகர் காளிமுத்து தனது தீர்ப்பின்போது தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா பொறுமினார், உரத்த குரலில் எதிர்க்கட்சியினரைப் பார்த்து பேசினார், எதிர்க்கட்சிகள் மீது கட்டுக்கடங்காத அளவுக்கு தாக்குதல் நடத்தப்பட்டது போன்ற வார்த்தைகள் இந்து பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது சட்டசபைக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் களங்கம் விளைவித்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சபாநாயகர் காளிமுத்து கூறியது:
கடந்த ஏப்ரல் 12ம் தேதி இந்துவில் வெளியான கட்டுரையில், முதல்வர் ஜெயலலிதாவின் அபத்தமான அவதூறுகள், எதிர்க்கட்சியினர் மீது சட்டசபையில் கட்டுக்கடங்காத தாக்குதல், ஜெயலலிதா பொறுமினார், உரத்த குரலில் எதிர்க்கட்சியினர் மீது புகார் தெரிவித்தார் ஜெயலலிதா போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது முதல்வரை அவமானப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது
அதேபோல, ஏப்ரல் 13ம் தேதி வெளியான மற்றொரு கட்டுரையில், படிப்பு மட்டும் ஒரு மனிதனை மேம்படுத்தி விட முடியாது, டாக்டர் ராமதாஸ், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் ஜாதி வெறியர்களாக இருப்பதே இதற்கு சரியான உதாரணம் என்று ஜெயலலிதா சொன்னார் என்ற வார்த்தைகள் வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் எழுதப்பட்டது
மேலும், இந்துவில் வெளியான தலையங்கத்தில், அரசியல் எதிரிகளை அடக்குவதற்கு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளதாக, என்ற வார்த்தை இருந்தது. இது சட்டசபையை களங்கப்படுத்தி விட்டது என்றார் காளிமுத்து.