சட்டசபையிலேயே பரிதி இளம்வழுதி கைது: சிறையில் அடைப்பு
சென்னை:
சட்டசபையில் உறுப்பினர் குமாரதாஸை தாக்க முயன்றதாகக் கூறி சட்டசபையில் பதிவான புகாரின்பேரில் திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதிக்கு, சபாநாயகர் காளிமுத்து 30 நாள் சிறை தண்டனை விதித்தார்.
இதையடுத்து சட்டமன்ற வளாகத்திலேயே அவர் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த சட்டசபைத் தொடரின்போது, திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்த தமிழ் மாநில காமராஜ் காங்கிரஸ் தலைவராக இருந்த (இப்போது அதிமுகவில் ஐக்கியமாகி விட்ட) டாக்டர் குமாரதாஸை நோக்கி பரிதி இளம்வழுதி ஏதோ பேசினார்.
இதையடுத்து குமாரதாஸை தாக்க முயன்றதாகவும், அசிங்கமாக பேசியதாகவும் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காமராஜ் காங்கிரஸின் மற்றொரு உறுப்பினர் ஹக்கீம் தீர்மானம் கொண்டு வந்தார். அது உரிமைக் குழுவின் பசீலனைக்கு விடப்பட்டது.
உரிமைக் குழு தனது பரிந்துரைகளை சபைக்கு நேற்று வழங்கியது. அதை சபை ஏற்றுக் கொள்வதாகவும், அதன் அடிப்படையில், பரிதி இளம் வழுதிக்கு 30 நாள் சாதாரண சிறைத் தண்டனை விதிக்கலாம் என்றும் நிதியமைச்சர் பொன்னையன் கூறினார்.
பொன்னையன் பேசுகையில், ரத்த தாகம் எடுத்தவர் போல பரிதி இளம்வழுதி அன்றைக்குப் பேசினார். சபையின் முழு மரியாதையையும், கண்ணியத்தையும் அவர் பாழ்படுத்தி விட்டார். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு, பரிதிக்கு 30 நாள் சிறைத் தண்டனை விதிக்கலாம் என்றார்.
இதை சபாநாகர் காளிமுத்து அமல்படுத்த உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்புக்கு திமுக, காங்கிரஸ், பாமக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெவித்தனர். சபாநாயகர் இந்த தீர்ப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
கோபமடைந்த திமுக உறுப்பினர்கள் உரிமைக் குழுவின் பரிந்துரை அறிக்கையை கிழித்து விசினர்.
இந் நிலையில், பரிதியை கைது செய்வதற்கான உத்தரவை சபாநாயகர் பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து சட்டசபை வளாகத்திற்குள்ளேயே பரிதியை காவல்துறையினர் கைது செய்து பலத்த பாதுகாப்புடன் வெளியே கொண்டு சென்றனர்.
வேனில் ஏற்றப்பட்ட அவர் நேராக மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications