ஜெ. தோல்வி அடைவார்: என்.ராம் ஆவேசம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தனது செயல்களில் நிச்சயம் தோல்வி அடைவார். அவரது சவாலை சந்திக்க இந்து நாளிதழ் தயாராக இருக்கிறது என்று இந்து நாளிதழின் தலைமை ஆசிரியர் என்.ராம் மிகவும் ஆவேசமாக கூறியுள்ளார்.
இந்து பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்து போலீஸார் தேடுதல்வேட்டை நடத்தி விட்டுச் சென்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த என்.ராம், இது என்ன விளையாட்டு? எதற்காக காவல்துறை அதிகாரிகள் அத்துமீறி அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள்? யார் அவர்களை ஏவி விட்டது?
ஒருவரைக் கைது செய்ய வேண்டும் என்றால் என்ன வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாகவே கூறியுள்ளது. அது கூடவா காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரியாது?
இங்கே கையை வீசிக் கொண்டு சில அதிகாரிகள் வந்தனர். கைது செய்ய வந்ததாகக் கூறினர். வாரண்ட் எங்கே என எனது நிருபர்கள் கேட்டபோது, வியர்த்து விறுவிறுத்துப் போய் பேயடித்த முகத்துடன் திரும்பி ஓடினார்கள்.
தலைமை நிருபர் ஜெயந்த்தின் வீட்டுக்குச் சென்று அவரது மனைவியை மிரட்டியுள்ளனர். பெட்ரூம் எங்கே உள்ளது, அதைத் திறந்து காட்டுங்கள் என்று அவரிடம் அநாகரிகமாக பேசியுள்ளனர். ஜெயலலிதா ஆட்சியில் போலீஸ் அநாகரீகம் உச்சத்தை அடைந்துவிட்டது.
இந்த தவறான செயலுக்குக் காரணமானவர்கள் கண்டிப்பாக அதற்கான விலையைக் கொடுத்தே ஆக வேண்டும். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் புகார் செய்யவுள்ளோம். இதை சட்டரீதியில் இந்து சந்திக்கும். யாருக்கும் எதற்காகவும் பயப்பட மாட்டோம்.
அரசிடம் எந்தவித முறையீட்டையும் செய்யப் போவதில்லை. நீதிமன்றத்தை அணுகுவோம். அதேபோல முன் ஜாமீன் கேட்கவும் போவதில்லை. அவர்கள் கைது செய்யட்டும், என்னதான் செய்யப் போகிறார்கள் என்பதையும் பார்ப்போம். இந்த விளையாட்டுக்கு நானும் தயார் என்றார்.
பத்திரிக்கையாளர்கள் நாளை உண்ணாவிரதம்:
சட்டசபையின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பத்திரிக்கையாளர்கள் சார்பில் நாளைஉண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த உண்ணாவிரதத்தில் ராஜ்ய சபா உறுப்பினரும், ‘துக்ளக்’ பத்திரிக்கையின் ஆசிரியருமான சோ.ராமசாமி,‘இந்து’ என்.ராம் மற்றும் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ டி.என். கோபாலன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் தமிழகக் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நாளை பத்திரிக்கையாளர்கள் சங்கம் நடத்தவுள்ள உண்ணாவிரப் போராட்டத்திலும், நவம்பர் 12ம் தேதி திமுகநடத்தவுள்ள மனிதச் சஙகிலிப் போராட்டத்திலும் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.