சென்னையில் "மின் அரசு" மாநாடு: அத்வானி, ஜெ. பங்கேற்பு
சென்னை:
மின் அரசு (ஈ-கவர்னன்ஸ்) குறித்த மாநாடு வரும் 13ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் துணைப் பிரதமர் அத்வானி, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், 3 நாள் நடைபெறும் மாநாட்டை அத்வானி தொடங்கி வைக்கிறார். மின் அரசு தொடர்பாக தேசிய அளவில் திட்டம் ஒன்றை வகுப்பதற்காக இந்த மாநாடு நடைபெறுகிறது. மண்டல அளவில் நடைபெறவுள்ள 7வது மாநாடு இது. இதற்கு முன்பு, பெங்களூர், கொல்கத்தா, அகமதாபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களில் நடந்துள்ளது.
இந்தியாவில் உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பேராசியர்கள், மத்திய அரசு அதிகாரிகள், வெளிநாட்டு நிபுணர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழகத்தில் கம்ப்யூட்டர்களின் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2002-03ம் ஆண்டுக்கான மென்பொருள் ஏற்றுமதி அளவு ரூ. 7000 கோடியாக இருந்தது. முந்தைய திமுக ஆட்சியில் இது ரூ. 3116 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.