பரிதி வழக்கு: சபாநாயகருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்னும் 2 வாரத்திற்குள்பதிலளிக்குமாறு கூறி சபாநாயகர் காளிமுத்துவுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
உரிமை மீறல் பிரச்சினை தொடர்பாக பரிதி இளம்வழுதி கடந்த 7ம் தேதி சட்டசபை வளாகத்திலேயே கைதுசெய்யப்பட்டார்.
இதை எதிர்த்து திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ்(ஆள்கொணர்) மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நடந்தது.
ஒரு பிரச்சினைக்கு இரண்டு முறை தண்டனை வழங்க இயலாது. ஆனால் பரிதி விவகாரத்தில் அரசியல் சட்டம்முற்றிலும் மீறப்பட்டு இரண்டாவது முறையாக அவர் தண்டிக்கப்பட்டுள்ளார் என்று ஆற்காடு வீராசாமி தரப்பில்வழக்கறிஞர் சண்முக சுந்தரம் வாதாடினார்.
அரசு தலைமை வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன் வாதிடுகையில், சட்டசபை என்பது தனிப்பட்ட அதிகாரங்கள்கொண்ட ஒரு அமைப்பு. அதில் நீதிமன்றங்கள் எந்த அளவுக்கு தலையிடலாம் என்பது கேள்விக்குறியாக உள்ளது.இதுதொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.
பரிதி இளம்வழுதிக்குப் போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்டது. எழுத்துப் பூர்வமாக அவரிடம் விளக்கம்கோரப்பட்டு பெறப்பட்டது. நேரடியாக கூப்பிட்டு விளக்கம் கேட்க வேண்டிய அவசியம் சட்டசபை உரிமைக்குழுவுக்கு இல்லை என்றார் அவர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சண்முகம், ஏ.கே.ராஜன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், சபாநாயகர்காளிமுத்து, தலைமைச் செயலாளர், சட்டசபை செயலாளர், மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ஆகியோருக்குநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு இவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.