பொடா நீதிமன்றத்தில் கருப்பு சட்டை அணிந்து வைகோ திடீர் போராட்டம்
சென்னை & டெல்லி:
இந்து, முரசொலி பத்திரிக்கையாளர்கள் மீதான தமிழக அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து, இன்று சென்னைபூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காகக் கொண்டு வரப்பட்ட வைகோ கருப்புச் சட்டைஅணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
காவல் நீட்டிப்புக்காக வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினர் இன்று பூந்தமல்லி பொடா நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டனர். அனைவரும் கருப்பு உடையில் இருந்தனர்.
வேனை விட்டு இறங்கியதும், வைகோ உள்ளிட்டவர்கள் திடீர் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பத்திரிக்கைச்சுதந்திரத்தை முடக்காதே, பரிதியை உடனே விடுதலை செய், அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் என்றகோஷங்களை அவர்கள் எழுப்பினர். அவர்களுடன் மதிமுக வழக்கறிஞர்களும், கட்சித் தொண்டர்களும் சேர்ந்துகொண்டனர்.
இதைப் பார்த்து திகைத்துப் போன காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.வைகோவையும் நெட்டித் தள்ளி உள்ளே கொண்டு செல்ல முயன்றனர். அப்போது அவர்களை வைகோகடுமையாக எச்சரித்தார். போராட்டம் எங்களது பிறப்புரிமை, அதை அடக்க நினைத்தால் நான் அஞ்ச மாட்டேன்என்றார்.
இதையடுத்து அவரை விட்டு விலகிய போலீசார் நிருபர்களை நோக்கி ஓடிவந்தனர்.
வைகோவும் மதிமுகவினரும் போராட்டம் நடத்துவதை படமெடுக்க விடாமல் தடுத்தனர். இதனால்போலீசாருக்கும் நிருபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
நிருபர்களுக்குத் துணையாக வைகோவும், அவரது வழக்கறிஞர்களும் போலீசாருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால்வாக்குவாதம் வெடித்தது. வைகோவைக் காண வந்திருந்த நூற்றுக்கணக்கான மதிமுகவினரும் போலீசாருக்குஎதிராக கோஷமிட்டனர்.
20 நிமிடங்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னரே வைகோ நீதிமன்றக்குள் சென்றார். இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
திரும்பி வந்த பின் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது:
பெங்களூரில் இந்து ஆசிரியர் ராமின் காரை வழிமறித்து தமிழக போலீசார் ஹை-வேஸ் கொள்ளையர்கள் மாதிரிநடந்து கொண்டுள்ளனர். ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்றும் வேலையை அவர்கள் செய்கின்றனர். இந்துவிஷயத்தில் ஜெயலலிதாவின் வக்கிர புத்தி வெளி உலகுக்கு தெரிந்துவிட்டது.
சட்டமன்ற நடவடிக்கைக்கும் ஜெயலலிதாவுக்கும் தொடர்பில்லை என சபாநாயகர் காளிமுத்து கூறுவது இந்தஆண்டின் சிறந்த ஜோக். சட்டமன்றத்தில் அதிமுகவினர் கொட்டாவி விட்டாலும் ஜெயலலிதாவிடம் கேட்டுத் தான்விட வேண்டும். இந் நிலையில் இப்படி ஒரு பொய்யை சொல்லத் துணிந்த காளிமுத்துவை மக்கள் மன்னிக்கமாட்டார்கள் என்றார்.
அப்போது தொடர்ந்து பேட்டி கொடுப்பதை போலீஸ் அதிகாரிகள் தடுத்தனர். அவர்களிடம் பேசிய வைகோ.உங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. நீங்கள் அதிகாரிகளுக்கு பயப்படுகிறீர்கள். அவர்கள் ஜெயலலிதாவுக்குபயப்படுகிறார்கள். வைகோ தும்மினால் கூட போலீசுக்கு மெமோ கொடுக்கிறார்கள். இதனால் உங்கள் மீது எனக்குஎந்தக் கோபமும் இல்லை என்றார்.
போலீசார் தலையை தொங்கவிட்டு நின்றனர்.
பொடா மறு ஆய்வுக் குழு கூட்டம்:
இதற்கிடையே, கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்ட பின்னர் பொடா மறு ஆய்வுக் குழு இன்று கூடுகிறது.
நீதிபதி அருண் சகார்யா தலைமையிலான 3 நபர் கமிட்டியிடம் தமிழகத்தில் இருந்து தான் நிறைய புகார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. முக்கியமாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர்நெடுமாறன், நக்கீரன் ஆசிரியர் கோபால் ஆகியோர் சார்பில் இந்தக் கமிட்டியின் முன் தமிழக அரசுக்கு எதிராகவழக்குகள் தாக்காகியுள்ளன.
இதையடுத்து இக் கமிட்டி விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸ்களுக்கு தமிழக அரசு உரிய பதில்அளிக்கவில்லை.
இந் நிலையில், சமீபத்தில் தான் இந்தக் கமிட்டிக்கு அதிக அதிகாரம் வழங்கும் உத்தரவை ஜனாதிபதி அப்துல் கலாம்மூலம் மத்திய அரசு பிறப்பித்தது. இதன்மூலம் பொடா கைதுகள் தொடர்பாக இக் கமிட்டி எடுக்கும் முடிவுகளுக்குமத்திய, மாநில அரசுகள் கட்டுப்பட வேண்டும்.
இந்த புதிய அதிகாரம் வழங்கப்பட்ட பின் இப்போது தான் முதன்முறையாக இந்தக் கமிட்டி கூடுகிறது. அப்போதுதங்கள் வசம் உள்ள புகார்கள், அது குறித்து மாநில அரசுகள் அனுப்பிய பதில்கள் ஆகியவை குறித்து இக் கமிட்டிபரிசீலனை செய்யும். அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்றும் விவாதித்து முடிவுகள் எடுக்கும்.
கமிட்டியின் கூட்டம் நாளையும் தொடர்ந்து நடக்கும் என்று தெரிகிறது. வைகோ விஷயத்தில் இனியும் தமிழகஅரசின் பதிலுக்காக காத்திருக்க மாட்டோம், நாங்களே முடிவுகள் எடுப்போம் என சில வாரங்களுக்கு முன்பேநீதிபதி சகார்யா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications