தஞ்சை அருகே பா.ஜ.க. பிரமுகர் வெட்டிக் கொலை
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணியின் பிரமுகர் ஒருவர் தலையை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பாபநாசத்தையடுத்த அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் சிவக்குமார் (32). இவர் இப் பகுதியின் பா.ஜ.க. செயற் குழு உறுப்பினராக இருந்தார். மேலும் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். இயக்கங்களின் பொறுப்பாளராகவும் இருந்தார்.
ஒரு மாதத்துக்கு முன் இந்து முன்னணி தலைவர் இராம.கோபாலனை பாபநாசத்துக்கு அழைத்து வந்து பயிற்சி முகாமை சிவக்குமார் நடத்தினார்.
இந் நிலையில் இன்று அதிகாலை சிவகுமாரின் உடல் சாலியமங்கலம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை ஒட்டி ஒரு முட்புதரில் கிடந்தது. அவரது தலை வெட்டப்பட்டிருந்தது. மேலும் உடல் முழுவதும் வெட்டுக் காயங்கள் இருந்தன.
இதையடுத்து அப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவல் வந்தவுடன் டி.எஸ்.பி. கோதண்டராமன் தலைமையிலான போலீஸ் படை அங்கு விரைந்தது. தஞ்சாவூர் எஸ்.பி. தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அம்மாபேட்டையில் இருந்து சிவக்குமாரை நேற்றிரவு ஒரு கும்பல் கடத்திச் சென்று கொலை செய்து சாலியமங்கலத்தில் வீசியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.