தமிழகத்தில் துக்ளக் ஆட்சி நடக்கிறது: இளங்கோவன்
கோபிச்செட்டிப்பாளையம்:
மக்கள், எதிர்க்கட்சிகள், பத்திரிக்கையாளர்களை மிரட்டுவது போல் யானைகளையும் ஜெயலலிதா மிரட்டிக்கொண்டிருக்கிறார் என காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறினார்.
கோபிப்செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற தியாகி திருப்பூர் குமரன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு அவர்பேசியதாவது:
தமிழகத்தில் தற்போது துக்ளக் ஆட்சி தான் நடக்கிறது. மக்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மாணவர்கள்,ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரைப் பற்றி தமிழக அரசுக்கு சிறிதும் அக்கறையில்லை.
கோயில்களில் ஆடு, கோழி பலியிடக்கூடாது என்று தடை விதித்தவர்கள் தினமும் அவற்றை முழுங்கிக்கொண்டிருக்கிறார்கள். தமிழக முதலவர் ஜெயலலிதாவுக்கு மரியாதை தெரியாது. மமதை, அகங்காரம், திமிர்கொண்டு செயல்பட்டு வருகிறார். முதலில் மற்றவர்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
மக்களை அடிமைகளாக நினைக்கக் கூடாது. மக்களுக்கு செய்த பாவங்களால் தற்போது முதுமலையில் 100யானைகளுக்குப் பூஜை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மனிதர்களை மதித்து நடந்தால் அவர்களேஜெயலலிதாவை வணங்குவர்.
நாட்டு விடுதலைக்காக காமராஜ் சிறை சென்றார். ஆனால் நாட்டைக் கொள்ளையடித்து, சூறையாடியதற்காகஜெயலலிதா சிறை சென்றார். விடுதலையான பின் வீர முழக்கம் இடுகிறார்.
தஞ்சையிலுள்ள விவசாயிகள் எலிக்கறி சாப்பிடுவது குறித்து பேசினேன். இதற்காக என் மீதும், செய்தியைவெளியிட்டதற்காக இந்து பத்திரிக்கை மீதும் வழக்குத் தொடர்ந்தார். சோனியாவைப் பற்றி பேச ஜெயலலிதாவிற்குஎன்ன தகுதி இருக்கிறது? ஜெயலலிதாவைப் பற்றி சோனியா எப்போதாவது பேசியதுண்டா?
தியாகி திருப்பூர் குமரனின் தபால் தலையை மத்திய அரசு வெளியிட பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்களைகொண்டு ஆவன செய்யப்படும் என்றார் அவர்.