தமிழக காங்கிரஸ் தலைவராக வாசன் நியமனம்: சோ.பா., இளங்கோவன் பதவிகள் பறிப்பு
டெல்லி:
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஜி.கே. வாசன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக தலைவர் பதவியில் இருந்து சோ.பாலகிருஷ்ணனும், செயல் தலைவர் பதவியில் இருந்து இளங்கோவனும் ராஜினாமா செய்தனர்.
பெரும கோஷ்டிச் சண்டைகள், நீண்ட சஸ்பெண்சுக்குப் பின் வாசனை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மாநிலத் தலைவராக நியமித்துள்ளார்.
மூப்பனார் தலைமையில் தனியாக இயங்கி வந்த தமிழ் மாநிலக் காஙகிரஸ் கட்சியை காங்கிரசுடன் இணைத்தார் வாசன். அப்போதே அவருக்கு மாநிலத் தலைவர் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவரை காங்கிரசின் தேசியப் பொதுச் செயலாளர்களில் ஒருவராக்கிய சோனியா, வாசனின் பரிந்துரைப்படி அவரது ஆதரவாளரான சோ.பாலகிருஷ்ணனைத் தலைவராக்கினார். தலைவர் பதவியில் இருந்த இளங்கோவனை செயல் தலைவராக்கினார்.
(வாசனுக்கு அந்தமான், நிக்கோபார் தீவுகளில் காங்கிரஸ் விவகாரங்களைக் கவனிக்கும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது.)
அன்று முதல் வாசன் கோஷ்டிக்கும் இளங்கோவன் கோஷ்டிக்கும் இடையே கடும் மோதல் நடந்து வந்தது. இந் நிலையில் வாசன் தரப்பில் இருந்து இளங்கோவன் கோஷ்டிக்குத் தாவினார் சோ.பாலகிருஷ்ணன்.
பின்னர் மீண்டும் வாசன் கோஷ்டிக்குத் தாவி, அவரே தலைவராக வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் சோ.பா.
கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை எட்டியதால் சோ.பாவையும் இளங்கோவனையும் டெல்லிக்கு அழைத்த சோனியா, இருவரையும் ராஜினாமா செய்ய வைத்தார்.
இதையடுத்து வாசனை தலைவராக நியமித்தார். இந்த அறிவிப்பை தமிழகத்துக்கான மத்தியப் பார்வையாளர் கமல்நாத் தெரிவித்தார்.
வாசன் இப்போது ராஜ்யசபா எம்.பியாகவும் உள்ளார்.
செயல் தலைவர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் இளங்கோவனுக்கு வேறு ஒரு முக்கிய பதவி தரப்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் திமுக- காங்கிரஸ் கூட்டணியை ஏற்படுத்தும் பொறுப்பும் அவரிடம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதற்கேற்ற வகையில் முக்கிய பதவி தரப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications