டிஸ்மிஸ் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய சங்கங்கள் முடிவு
சென்னை:
587 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக நீதிபதிகள் குழு பரிந்துரைத்துள்ளது மிகவும் அதிர்ச்சி தருவதாக அரசு ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
நீதிபதிகள் குழுவின் பரிந்துரையை ஏற்று தலைமைச் செயலகம் மற்றும் சென்னையைச் சேர்ந்த 587 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் அரசாணை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தலைமைச் செயலக ஊழியர் சங்கத் தலைவர் பாண்டுரங்கன் பெரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்துக் கூறுகையில், நீதிபதிகள் குழுவின் தீர்ப்பு குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால் அரசு முடிவு எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
முதல்வர் அம்மா அவர்கள் பெரும் மனது வைத்து, மனிதாபிமான அடிப்படையில், நல்லெண்ண அடிப்படையில் பாதிக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மற்ற ஊழியர் சங்கங்களும் இந்த தீர்ப்பு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளன. உச்சநீதிமன்றம் கூறியபடி விசாரணை நடக்கவில்லை என்று அவை தெரிவித்துள்ளன. ஊழியர் நடத்தை விதிப்படிதான் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
ஆனால், டெஸ்மா சட்டத்தின் 7-வது பிரிவை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஸ்ரீதரன் கூறுகையில், உச்சநீதி மன்ற உத்தரவுக்கு முரணாக நடந்த விசாரணை எங்களுக்கு அதிருப்தி அளித்துள்ளது. நீதிபதிகள் குழுவின் பரிந்துரை பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் என்றார்.