ஜெ. வழக்கு: பெங்களூர் விமான நிலையம் அருகே தனி கோர்ட்?
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க அமைக்கப்படவுள்ள தனி நீதிமன்றம், பெங்களூர் விமான நிலையம் அருகே அமையலாம் என்று கூறப்படுகிறது.
ஜெயலலிதா கடந்த முறை முதல்வராக இருந்தபோது, வருமானத்திற்கு மீறிய வகையில் ரூ. 66 கோடி அளவுக்கு சொத்துக்கள் வாங்கிக் குவித்ததாக கடந்த திமுக ஆட்சியின்போது வழக்குத் தொடரப்பட்டது.
சென்னை தனி நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடந்து வந்தது. ஆனால் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், விசாரணையின் போக்கு திசை மாறியது. அரசுத் தரப்பு சாட்சியங்கள் பல்டி அடித்து விட்டன.
இதனால், இந்த வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் இந்த வழக்கை முதலிலிருந்து விசாரிக்க உத்தரவிட்டது.
இதையடுத்து பெங்களூரில் தனி நீதிமன்றம் அமைக்கும் பணிகளில் அம் மாநில அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்த வழக்கில் ஆஜராக முதல்வர் ஜெயலலிதா வர வேண்டியதிருக்கும் என்பதால் அவரது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பெங்களூர் விமான நிலையம் அருகே தொம்லூர், எச்.ஏ.எல். லேஅவுட் ஆகிய பகுதிகளில் ஒன்றில் தனி நீதிமன்றத்தை அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான இடத்தைத் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையே, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பெங்களூருக்கு அனுப்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
வழக்கின் குற்றப்பத்திரிக்கை, அது தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள், சாட்சியங்கள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை இன்னும் ஒரு வாரத்திற்குள் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications