சட்டமன்றத்தின் அதிகாரம் குறித்து மறு ஆய்வு தேவை: என். ராம்
கோவை:
பத்திரிக்கைச் சுதந்திரம், பேச் சுரிமை மற்றும் சட்டமன்றத்தின் உரிமைகள் பற்றி விவாதம் நடத்தவும், விதிகளை வகுக்கவும் நேரம் வந்து விட்டது என்று இந்து பத்திரிக்கையின் தலைமை ஆசிரியர் ராம் கூறியுள்ளார்.
கோவையில் ராம் கூறியதாவது: சட்டமன்றத்திற்கு வானளாவிய அதிகாரங்கள் இருப்பதாக முன்னாள் தமிழக சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கூறியிருக்கிறார். ஆனால் நாடாளுமன்றத்திற்குக்கூட உயர்ந்தபட்ச அதிகாரம் கிடையாது என்பது சாதாரண குடிமகனுக்கும் தெரியும்.
தங்களது அதிகாரம் குறைக்கபட்டு விடுமோ என்று பயத்தின் காரணமாகத்தான் தனி நபர் உரிமை, பத்திரிக்கைச் சுதந்திரம் பற்றிய சட்டங்களைத் திருத்தியமைக்க ஆட்சியாளர்கள் தயங்குகிறார்கள்.
போபர்ஸ் ஊழல் பற்றி எழுதும்போது கூட ஆட்சியாளர்கள் மீது உரிமை மீறல் நடப்பதாக எந்த ஒரு குற்றச்சாட்டும் வெளிப்படவில்லை. ஏனெனில் சமூக பொறுப்போடு உண்மைகளை வெளிப்படையாக எழுதுவது பத்திரிக்கைத் தர்மமாகும்.
ஆனால், அவ்வாறு எழுதும்போது தங்களது உரிமைகளில் தலையிடுவதாக தமிழக ஆட்சியாளர்கள் கூறுவது மோசமான அரசியல் முன்னுதாரணமாகும் என்றார்.