வாஜ்பாய் தலைமையில் மெளன அஞ்சலி
சென்னை:
முரசொலி மாறனின் மறைவையடுத்து இன்று காலை டெல்லியில் வாஜ்பாயின் இல்லத்தில் மத்திய அமைச்சரவைக்கூட்டம் நடந்தது.
அதில் மாறனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவசரமாகக் கூடிய அக் கூட்டத்தில் வாஜ்பாய்தலைமையில் மாறனுக்கு இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலியும் அனுஷ்டிக்கப்பட்டது.
மேலும் அரசு மரியாதைகளுடன் மாறனின் உடலை தகனம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது. இந்தத் தகவல்சென்னை ராணுவத் தலைமைகத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ராணுவ மரியாதைகளுடன் இறுதிச்சடங்கு நடத்தும் பணியை ராணுவ அதிகாரிகள் மேற்கொண்டனர்.
முன்னதாக நேற்றிரவு மாறனின் மறைவுச் செய்தி ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபிரதமர் வாஜ்பாயிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கருணாநிதியுடன் தொடர்பு கொண்டு பேசிஆறுதல் கூறினார். அதேபோல, மாறனின் மகன் கலாநிதி மாறனுடனும் பேசி ஆறுதல் தெரிவித்தார்.