இலங்கை தமிழர்களுக்கு இட ஒதுக்கீடு: சு.சுவாமி மனு தள்ளுபடி
சென்னை:
இலங்கைத் தமிழ் அகதி மாணவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குமாறு, மாநில அரசுக்குஉத்தரவிடக் கோரி ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனுவை, சென்னைஉயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 1983ம் ஆண்டு இலங்கையில் வன்முறை வெடித்ததால் ஆயிரக்கணக்கான தமிழர்கள், அகதிகளாகதமிழகத்திற்கு வந்தனர். அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ, 1984ம் ஆண்டு முதல் சிறப்பு இடஒதுக்கீடு உள்ளிட்ட சில சலுகைகளை மத்திய அரசு அறிவித்தது.
பின்னர் 1992-93ம் ஆண்டில் இந்த இட ஒதுக்கீட்டுச் சலுகையை ரத்து செய்தது. மத்திய அரசு சலுகைவழங்கியபோது, அதை தமிழக அரசும் கடைப்பிடித்து வந்தது. மத்திய அரசு நிறுத்தியபோது, அப்போதிருந்தஅதிமுக அரசு அதை நிறுத்தி விட்டது.
இருப்பினும் 1996ம் ஆண்டு முதல் மீண்டும் இட ஒதுக்கீட்டுச் சலுகையை திமுக அரசு தொடர்ந்தது. ஆனால்,பின்னர் வந்த அதிமுக அரசு 2003-04ம் ஆண்டு இந்த இட ஒதுக்கீட்டு முறையை மீண்டும் நிறுத்தி விட்டது.
இதை எதிர்த்து சுப்பிரமணியம் சுவாமி வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டி, நீதிபதி ஞானப் பிரகாசம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் இடஒதுக்கீடு தருவது மத்திய அரசின் பணி. இதில் மாநில அரசு தலையிட முடியாது. இட ஒதுக்கீடு அளிப்பதா,வேண்டாமா என்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி சுவாமியின் மனுவைத்தள்ளுபடி செய்தது.