எய்ட்ஸ் நோயாளியை உயிருடன் புதைக்க முயற்சி!
கரூர்:
இன்னும் சில மணி நேரத்தில் இறந்து விடுவார் என்று டாக்டர்கள் கூறியதால், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த எய்ட்ஸ் நோயாளியை உயிருடன் புதைக்க முயற்சி நடந்தது.
இதையடுத்து அவரைப் புதைக்கச் சென்ற கும்பல் தடுத்து நிறுத்தப்பட்டு, அந்த நோயாளி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கரூர் செங்குந்தன் நகரைச் சேர்ந்தவர் ஜாபர் சாதிக். மனைவியை விவாகரத்து செய்து விட்ட இவருக்கு எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு இருந்ததால் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அங்கு இவருக்கு எய்ட்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு இவரை மாற்றினார்கள்.
அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாதிக்கின் உடல் நிலை நேற்று மிகவும் மோசமடைந்தது. தொடர்ந்து அவர் கோமா நிலைக்குச் சென்று விட்டார். அவரது உடல் நிலையை பரிசோதித்த டாக்டர்கள், சில மணி நேரம் மட்டுமே இவர் உயிரோடு இருப்பார் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து சாதிக்கை வீட்டுக்குக் கொண்டு வந்தனர் அவரது உறவினர்கள். ஆனால், சாதிக் வசித்து வந்த வீட்டை வடைக்கு விட்டிருந்த நபர், எய்ட்ஸ் பாதித்த சாதிக்கை உள்ளேஅனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார். அக்கம் பக்கத்தினரும் சாதிக்கை வீட்டுக்குக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.
என்ன செய்வது என்று புரியாமல் குழம்பினர் சாதிக்கின் உறவினர்கள். எப்படியும் சாகப் போகிறார், இப்போதே இறுதிச் சடங்குகளை செய்து அடக்கம் செய்து விடலாமே என்று கூட்டத்தில் ஒருவர் அதிர்ச்சிகரமான ஆலோசனை கூறியுள்ளார். அதை அனைவரும் ஏற்றுக் கொண்டு தலையாட்டினர்.
இதையடுத்து வழக்கமான சடங்குகளை செய்த உறவினர்கள், சாதிக்கை உயிருடன், பாலாம்பாள்புரத்தில் உள்ள முஸ்லீம் மயானத்திற்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் உயிருடன் சாதிக்கை புதைக்க நடக்கும் ஏற்பாடுகள் குறித்து அறிந்த உள்ளூர் முஸ்லீம் பிரமுகர்கள் விரைந்து வந்து அதைத் தடுத்தனர்.
பின்னர், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சாதிக்கை கரூர் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.