ஜனனி- நடராஜனை பிரிக்கவே கஞ்சா கேஸ் போட்டார்கள்: கருணாநிதி
சென்னை:
சசிகலாவின் கணவர் நடராஜனிடம் இருந்து சசிகலாவைப் பிரிக்கவே ஜனனி மீது பொய்யாக கஞ்சா கேஸ் போட்டார்கள் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசினார். அப்போது அவரிடம் நமது எம்.ஜி.ஆர். பத்திரிக்கை நிருபர், டான்சி வழக்கில் ஒரு மாதிரியாகவும் நீதிபதி கற்பக விநாயகம் விஷயத்தில் முரண்பட்டும் பேசுகிறீர்களே என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த கருணாநிதி, செரீனா (ஜனனி) கேஸ் என்றாலே நடராஜன் சம்பந்தப்பட்ட விஷயம் என்பது எல்லோருக்கும் தெரியும். நடராஜனிடம் இருந்து ஜனனியைப் பிரிக்க முயற்சி செய்தார்கள். அதற்காக ஜனனி மீது கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு தொடர்ந்துள்ளார்கள். ஜனனியிடம் கஞ்சா ஏதும் இல்லை. உண்மையா, இல்லையா?. மனதார பொய் சொல்லக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
நமது எம்.ஜி.ஆர். நிருபர் கேள்வி கேட்டதற்காக இந்த பதிலை சொல்கிறேன். இதற்காக என் மீது கஞ்சா கேஸ் போட்டாலும் சரி.
டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மனசாட்சியை நினைத்துப் பார்த்து, பரிகாரம் தேடுமாறு கூறியுள்ளது.
இந்தக் கண்டனம், தண்டனையைவிடவும் மிகப் பெரியது, கடுமையானது என நாங்கள் நினைக்கிறோம். இதனால் இந்த வழக்கில் விடுதலையானதற்காக ஜெயலலிதா மகிழ்ச்சி அடைவதில் அர்த்தமில்லை.
உச்ச நீதிமன்ற கண்டனத்துக்குள்ளான ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என அதிமுக, பா.ஜ.கவைத் தவிர வேறு எல்லா கட்சிகளுமே கோரிக்கை விடுத்துள்ளன. திமுகவின் நிலையும் அது தான்.
நூற்றுக்கு 95 நீதிபதிகள் நீதிபதிகளாக இருக்கிறார்கள். மீது பேர் நீதி- பாதிகளாக இருக்கிறார்கள் என்றார்.
இந்த வழக்கை திமுக சரியாக நடத்தவில்லை என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளது குறித்துக் கேட்டபோது பதிலளிக்க கருணாநிதி மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications