ஜனனி வழக்கிலிருந்து விலகினார் நீதிபதி கற்பகவிநாயகம்: கருணாநிதிக்கு கடும் கண்டனம்
சென்னை:
ஜனனி வழக்கு அரசியலாக்கப்பட்டு விட்டதால் அதை தான் விசாரிக்க விரும்பவில்லை என்று கூறி அந்த வழக்கில் இருந்து நீதிபதி கற்பக விநாயகம் விலகிக் கொண்டார். இதை அரசியலாக்கியதாக திமுக தலைவர் கருணாநிதிக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று காலை முதலே அதிரடியான பல சம்பவங்கள் நடந்தன.
ஜனனியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று மாலை 3 மணிக்கு மீண்டும் தொடரவிருந்த நிலையில், பகல் 12 மணியளவில் அதிமுக எம்.பியும், முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கறிஞருமான ஜோதி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியை சந்தித்து ஒரு அவசர மனுவைக் கொடுத்தார்.
அந்த மனுவில், நீதிபதி கற்பக விநாயகம் விதிமுறைகளை மீறி ஜனனி வழக்கு விசாரணையை நடத்தி வருகிறார். குற்றம் சாட்டப்பட்ட ஜனனியை உட்கார வைத்துவிட்டு, ஐபிஎஸ் அதிகாரியான மதுரை கமிஷ்னரை நிற்க வைத்து கடுமையான கேள்வி எழுப்பி வருகிறார்.
இதனால் இந்த வழக்கை வேறு நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதில் அதிமுக வழக்கறிஞர் கோரியிருந்தார்.
இதைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு மேல், தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியை, நீதிபதி கற்பக விநாயகம் சந்தித்துப் பேசினார்.
இதன் பின்னர் 3.30க்கு ஜனனி வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி கற்பக விநாயகமே விசாரணையைத் தொடங்கினார். ஆனால், கடந்த முறை இருந்த வேகம் குறைந்து காணப்பட்டது.
சென்ற முறை விசாரணையின்போது மதுரை போலீஸ் கமிஷனர் விஜயக்குமாரை நீதிபதி கற்பக விநாயகம் கேள்விகளால் துளைத்தார். ஜனனியைக் கைது செய்ய ஏன் இவ்வளவு அவசரப்பட்டீர்கள், இந்த வழக்கின் பின்னணியில் இருப்பது யார் என கேட்டார்.
இதுகுறித்து முரசொலி பத்திக்கையில் கருணாநிதி எழுதுகையில், யாரையோ திருப்திப்படுத்தும் வகையில் செயல்பட்டதற்காக ஐ.பி.எஸ். அதிகாரிகள் நீதிபதிகளிடம் திட்டும் வாங்கும் அளவுக்கு தமிழகத்தில் நிலைமை போய்விட்டது. இது துரதிர்ஷ்டவசமானது என்று எழுதியிருந்தார்.
இதற்கு நேற்று கற்பக விநாயகம் கடும் கண்டனம் தெரிவித்தார்.
விசாரணையின்போது அவர் பேசுகையில், நான் தெரிவித்த சில கருத்துக்கள் குறித்து திமுக தலைவர் கருணாநிதி தனது கட்சிப் பத்திரிக்கையில் கருத்துத் தெவித்துள்ளார். இவர் யார் என் பேச்சுக்கள் குறித்து கருத்து தெரிவிக்க? யார் இவருக்கு அதிகாரம் தந்தது? இது அவரது வேலையா?
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஏன் நடந்து கொள்ளவில்லை என்று மட்டும்தான் மதுரை காவல்துறை ஆணையரிடம் நான் கேட்டேன். அதைக் கேட்க எனக்கு முழு உரிமையும் உள்ளது. இதை யாரும் விமர்சிக்க முடியாது.
உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்று மதுரை கமிஷனடம் நான் கூறியதற்குக் காரணம், அப்போதாவது அவர் தனது தவறை உணர்வார் என்ற எண்ணத்தில்தான், மாறாக தண்டிப்பதற்காக அல்ல.
கருணாநிதி முதல்வராக இருந்தவர், அனுபவமுள்ள அரசியல்வாதி. அவர் இந்த அளவுக்கு இறங்கி கருத்துக் கூறியிருக்கக் கூடாது. கருணாநிதியின் கருத்து, ஏதோ நான் இந்த அரசுக்கு எதிராகவும், முதல்வருக்கு எதிராகவும் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டது.
உண்மையில், இந்த அரசுக்கு எதிராக நான் இல்லை, இந்த அரசில் ஆங்காங்கே குறைகள் இருக்கலாம். ஆனால் மொத்தத்தில் இது நல்ல அரசு, சிறந்த அரசு.
தமிழ்நாட்டுக்கென்று தனியாக ஒரு நாகரீகம், கலாச்சாரம் உள்ளது. ஆனால் அது கருணாநிதியிடம் இல்லை. அவர் கூறியுள்ள கருத்துக்கள் நீதிமன்றத்தை அவமதிப்பதாக உள்ளது. அவரது எழுத்து எல்லாவற்றையும் குலைத்து விட்டது.
இதற்கு மேலும், இந்த வழக்கை நான் விசாரிக்க விரும்பவில்லை. முன்னாள் முதல்வருக்கும், இன்னாள் முதல்வருக்கும் இடையே ஊசலாட நான் விரும்பவில்லை என்று காட்டமாக கூறினார் நீதிபதி கற்பக விநாயகம்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுமாறு கோரி தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிக்கு கடிதம் அனுப்பினார் கற்பக விநாயகம்.
இருப்பினும், ஜனனி வழக்கைப் பொருத்தவரை அவரும், அவரது தாயாரும் 120 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வருவதால், இந்த வழக்கை ஒரு வாரத்திற்குள் முடித்தால் நல்லது என்றும் தலைமை நீதிபதிக்கு கற்பக விநாகம் யோசனை கூறியுள்ளார்.
அதுவரை ஜனனியை மயிலாப்பூர் மகளிர் காப்பகத்திலேயே தங்க அனுமதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜனனியின் அண்ணன் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் ஜனனியிடம் பேசவும் நீதிபதி கற்பக விநாயகம் அனுமதி அளித்தார்.