ஜெ.-சசி ஹைதராபாத் பயணம்-: நாயுடுவை சந்திக்கிறார்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா இன்று சசிகலாவுடன் ஹைதராபாத் சென்றார்.
டான்சி நில பேர வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. இந் நிலையில் ஜெயலலிதா இன்று தனி விமானத்தில் சசிகலாவுடன் ஹைதராபாத் சென்றார். இம் மாதக் கடைசி வரை அவர் ஹைதராபாத்தில் தங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே நாளை மறுதினம் அவர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்துப் பேசுகிறார். அப்போது தேசிய அரசியல், மூன்றாவது அணி குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
இந் நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு வெகுவாக குறைந்துள்ளது. அடுத்த மாத பிற்பகுதி வரை மட்டுமே குடிநீர் கொடுக்க இயலும். எனவே கண்டலேறு அணையிலிருந்து 3 டிஎம்சி தண்ணீரை எடுத்துக் கொள்ள அனுமதிக்குமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.
இக் கோரிக்கையை நேரில் சென்று வலியுறுத்துவதற்காக முதல்வர் ஜெயலலிதா ஹைதராபாத்தில் 28ம் தேதி நாயுடுவைச் சந்திக்கவுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்காக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் நாளை மறுநாள் ஹைதராபாத் செல்கின்றனர்.
ஜெயலலிதாவின் இந்த திடீர் ஹைதராபாத் பயணத்தால் 27, 28ம் தேதிகளில் சென்னையில் நடக்க இருந்த கலெக்டர்கள், எஸ்.பிக்கள் மாநாடு ரத்து செய்யப்பட்டுவிட்டது.
அன்ன தானத்திற்கு ஜெ. ரூ 40,000:
முதல்வர் ஜெயலலிதா தனது 4 மாத சம்பளப் பணத்தை நான்கு கோவில்களின் அன்னதானத் திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
திருக்கோவில் அன்னதானத் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஜெயலலிதா, அன்று முதல் தனது மாதச் சம்பளத்தை ஒவ்வொரு கோவிலுக்கும் நன்கொடையாக வழங்கி வருகிறார்.
அந்த வகையில் தனது ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாத சம்பளமான ரூ. 40,000 பணத்தை, சென்னை சக்தி விநாயகர் கோவில், வல்லக்கோட்டை சுப்ரமணியசுவாமி கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் வெங்கடாச்சலபதி கோவில் ஆகியவற்றிற்கு அளித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட கோவில்களின் நிர்வாக அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் இதற்கான காசோலைகளை முதல்வரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.