500 நலிவடைந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம்: ஜெ. அறிவிப்பு
சென்னை:
தமிழகத்தில் நலிவடைந்த நிலையில் இருக்கும் திரைப்பட, நாடக, இசை, கூத்துக் கலைஞர்கள் மேலும் 500 பேருக்கு மாதம் ரூ. 500 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கும் விழா மூன்றாண்டுகளுக்குப் பின் சென்னையில் நடந்தது. 2001, 2002, 2003ம் ஆணடுக்கான விழாக்கள் ஒட்டு மொத்தமாக நடந்தது.
நாடகத் துறையினர், இசைத் துறையினர் மற்றும் திறைத் துறையைச் சேர்ந்த 91 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஆளுநர் ராம் மோகன் ராவ், முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர் செம்மலை, இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பி.பி.சீனிவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விருதுகளை வழங்கி ஜெயலலிதா பேசுகையில், கடந்த ஆண்டு நலிவடைந்த, வறுமை நிலையில் உள்ள 498 கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டேன்.
இந்த ஆண்டு முதல் மேலும் 500 பேருக்கு மாதாந்திர ஓய்வூதியமாக மாதம் ரூ. 500 வழங்கப்படும். இதேபோல, மரணமடைந்த கலைஞர்களின் குடும்பத்திற்கு தரப்படும் கருணைத் தொகை ரூ. 5,000லிருந்து ரூ. 6,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தம் 1,170 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டும்தான் கலையை கடவுளாக மதிக்கிறோம். எனவேதான் அதிமுக ஆட்சி, அழிந்து வரும் அரிய கலைகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தை புதுப் பொலிவுடன் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் சிவாஜி உள்ளிட்ட 18 பழம் பெரும் கலைஞர்களின் படங்களையும் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
நடிகர்கள் விவேக், வினுச்சக்கரவர்த்தி, கவுண்டமணி, செந்தில், முரளி, பிரகாஷ் ராஜ், நடிகைகள் ரேகா, கனகா உள்ளிட்டோர் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர். நடிகைகள் விஜயசாந்தி, சிம்ரன் ஆகியோர் விருது வாங்க வரவில்லை.