நீதிபதிக்கு நிர்பந்தங்கள் வந்ததாக கருணாநிதி கருத்து
சென்னை:
தனக்கு அவப் பெயர் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே என் மீது பழி சொல்லியிருக்கிறார் நீதிபதி கற்பக விநாயகம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஜனனியின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் இருந்து நீதிபதி கற்பக விநாயகம் விலகிக் கொண்டார். இந்த வழக்கு விசாரணை தொடர்பாக கருணாநிதி தெரிவித்திருந்த சில கருத்துக்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதற்கு கருணாநிதி இன்று பதில் அளித்தார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ஜனனியின் ஜாமீன் மனுவை கற்பக விநாயகம் விசாரிக்கக் கூடாது என்று அதிமுக சார்பில் ஒரு மனு காலையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்து தலைமை நீதிபதி தீர்ப்பு கூற இருந்த நிலையில், தன்னை நீக்கிவிட்டு ஜனனி வழக்கில் தீர்ப்பு வருவதை விரும்பாத கற்பக விநாயகம், அவராகவே வழக்கிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
போலீசாரிடம் அவர் எழுப்பிய கேள்வியைத் தான் நானும் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். ஒரு அரசியல்வாதியாக போலீஸாரை நீதிபதி கேள்வி கேட்டதையும், போலீஸ் துறையை தன் வசம் வைத்துள்ள முதல்வரையும் குறிப்பிட்டு நான் எழுதினேன். மற்றபடி நீதிபதியை விமர்சித்து நான் ஏதும் எழுதவில்லை.
இந் நிலையில் என் மீது அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். தனக்கு அவப் பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காகவும், சில நிர்பந்தங்கள் காரணமாகவும் என் மீது குறை சொல்லியிருக்கிறார். அவர் நல்ல நீதிபதிதான். ஆனால் நிர்பந்தங்கள் அவ்வாறு கூற வைத்துள்ளது. நெருக்கடிகளில் இருந்து அவரை மீட்டுக் கொள்ள நான் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளேன். அதில் எனக்கு மகிழ்ச்சி தான்.
இதில் நீதிமன்ற அவமதிப்பு ஏதும் இல்லை. இந்த வழக்கை நீதிபதி கற்பக விநாயகம் நடத்திய விதம், விசாரித்த முறை ஆகியவற்றைப் பார்த்தபோது, ஜனனிக்கு நிச்சயம் ஜாமீன் கிடைத்து விடும் என்ற நிலை இருந்தது என்றார்.
மாறனின் மறைவுக்கு அதிமுக தலைவர்கள் யாரும் அஞ்சலி செலுத்த வரவில்லையே என்று கேட்டபோது, அது அவர்களுடையே கலாச்சாரத்தையே காட்டுகிறது.மாறனின் உடல் கோபாலபுரத்தில் கிடத்தப்பட்டிருந்தபோது, அடுத்த தெருவில் உள்ள போயஸ் கார்டனில் வெடி போட்டு கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.
எம்.ஜி.ஆர். இறந்தபோது ஒட்டுமொத்த திமுக நிர்வாகிகளும் அங்கிருந்தோம். நாவலர் இறந்தபோது டெல்லியில் இருந்து நாங்கள் ஓடோடி வந்தோம். அது எங்கள் கலாச்சாரத்தைக் காட்டுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications