திமுக மாஜி அமைச்சர் செல்வராஜின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவு
கோவை:
முன்னாள் திமுக அமைச்சரான அந்தியூர் செல்வராஜ் மீது தொடரப்பட்டுள்ள ரூ.40 லட்சம் சொத்துக் குவிப்பு வழக்கில், அவரது சொத்துக்களை முடக்கி வைக்க ஈரோடு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியின்போது கதர் மற்றும் ஊரகத் தொழில் துறை அமைச்சராக அந்தியூர் செல்வராஜ் பதவி வகித்தார். அமைச்சராக இருந்த 1996- 2001 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.40 லட்சம் அளவில் சொத்து சேர்த்ததாக, பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஈரோடு மற்றும் அவரது சொந்த ஊரான அந்தியூரில் நான்கு வீடுகள். இரண்டு காலிமனைகள், ஒரு குவாலீஸ் கார் ஆகியவை அமைச்சராக பதவி வகித்தபோது வாங்கியவை என்று குற்றப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் அந்தியூர் செல்வராஜூடன், அவரது மனைவி பாப்பாத்தி, மகன் பரமசிவம், மகள் கஸ்தூரி ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 168 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சாட்சிகளிடம் விசாரணை நடந்து வரும் நிலையில், செல்வராஜின் சொத்துக்களை முடக்கி வைக்க லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சொத்துக்களை முடக்கி வைக்காவிட்டால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேறு யாருக்ணீாவது சொத்துக்களை விற்கும் சாத்தியம் உள்ளது. எனவே சொத்துக்களை முடக்கி வைக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் ஜெயராமன் , ரூ.40 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி வைத்து உத்தரவிட்டார்.